அமெரிக்காவில் பலி 1½ லட்சத்தை தாண்டியது

breaking
ஒவ்வொரு நாளும் கொத்துக்கொத்தாய் மனிதர்கள் இறந்துபோகிறார்கள். இந்த நூற்றாண்டில் அமெரிக்க வல்லரசின் சரித்திரத்தில் எந்தப்போரிலும் இப்படி ஒரு உயிர்ப்பலியை சந்தித்தது இல்லை. ஆனால் சந்திக்க வைத்து ஒவ்வொரு நாளும் வெறுப்பேற்றி வருகிறது கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொரோனா வைரஸ்.
தொற்று பரவல் 44¼ லட்சத்தை கடந்து சென்றுகொண்டிருப்பதாக அதே அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் கணக்கு சொல்கிறது.
இதற்கு முடிவே கிடையாதா? கொரோனாவின் மரணப்பசி தீர்வது எப்போது?
அமெரிக்காவில் பிரபல ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் அங்கமான ஹார்வர்டு குளோபல் சுகாதார நிறுவனத்தின் இயக்குனரும், இந்திய வம்சாவளியுமான டாக்டர் ஆசிஷ் ஜா சொல்கிறார் இப்படி...
“நாம் ஒரு நாடாக இதை தடுத்து நிறுத்துவதற்கான கருவிகளை பெற முடியவில்லை. இந்த மரணங்களை தடுக்க நாம் முன்னுரிமை அளிக்கவில்லையோ என்பது பித்து பிடித்தாற்போல ஆக்குகிறது.
என்னைப் பொறுத்தவரையில் இது ஏமாற்றம். இது சோகம். அடுத்த 1½ லட்சம் என்ற எண்ணிக்கையை எவ்வாறு தடுப்போம் என்பதை கண்டுபிடிக்க முயற்சிக்க தீர்மானிப்போம்”.
குறிப்பிட்ட சில மாகாணங்களில் சாவு ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே போவது சோகம். கலிபோர்னியாவில் நேற்று முன்தினம் 197 பேர், புளோரிடாவில் 216 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
இப்படியே சாவு பெருகிக்கொண்டே போனால் எப்போது பள்ளிகளை திறப்பது என்பது கேள்விக்குறியாகி பதில் இன்றி நிற்கிறது.
வாஷிங்டன் வெள்ளை மாளிகை கொரோனா தடுப்பு பணிக்குழுவில் இடம் பெற்றுள்ள மருத்துவ நிபுணர் டாக்டர் அந்தோணி பாசி, அமெரிக்காவின் இன்றைய நிலைக்கு காரணம் சொல்கிறார்-
“வசந்த காலத்தின் பிற்பகுதியில் வணிகங்கள் மீண்டும் திறக்கப்பட்டதும், தனிமனித இடைவெளி விதிமுறைகளை தளர்த்தியதும்தான் கொரோனாவின் தீவிர தாக்குதலுக்கு காரணமாயிற்று. யாரெல்லாம் இயல்பு நிலை விரைவாக திரும்ப வேண்டும் என்று விரும்புகிறார்களோ அத்தனை பேரும் முக கவசம் அணிய வேண்டும்; வெளியே சென்று சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சமூக கூடல்களை நிறுத்த வேண்டும். மதுபான கூடங்களை மூட வேண்டும்”.
கூடவே ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக வல்லுனர்களும் யோசனை சொல்கிறார்கள்.
“கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி உள்ளூர் அளவிலும் கொள்கை நடவடிக்கைகளுடனான பதிலளிப்பை மீண்டும் தொடங்க வேண்டும். உலகின் பிற நாடுகளைப் போல் அல்லாமல் அமெரிக்கா இந்த தொற்று நோயை கட்டுப்படுத்தும் நிலையில் இல்லை. ஆனால் இதை மீட்டமைக்க வேண்டிய நேரம் இது” என்று சொல்லி 10 பரிந்துரைகளையும் செய்திருக்கிறது.
டிரம்ப் நிர்வாகம் கவனத்தில் கொள்கிறதோ இல்லையே அமெரிக்க மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கவனித்தால் நல்லது.