'ஷானியின் கைது எதிர்வரவிருக்கும் மிகமோசமான அரசியல் வேட்டையின் முன்னோட்டமே!': மங்கள எச்சரிக்கை

breaking
  ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வாளர் மாத்திரமே. அவர் கைது செய்யப்பட்டிருக்கும் அதேவேளை, இந்த விசாரணைகளை தொடங்கிவைத்த அப்போதைய அரசாங்கத்தலைவர் இப்போது ஆளுந்தரப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றார். இவையனைத்தும் விரைவில் இடம்பெறவிருக்கும் மோசமான வேட்டையொன்றுக்கான முன்னோட்டமாகும் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர எச்சரிக்கை விடுத்திருக்கிறார். குற்றப்புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஷானி அபேசேகர வழக்கு விசாரணையொன்றில் சாட்சியங்களை மறைத்தார் என்ற குற்றச்சாட்டில் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டிக்கும் விதமாகத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் மங்கள சமரவீர செய்திருக்கிறார். பொலிஸாரின் வேலை குற்றங்களை எதிர்த்துப் போராடுவதோடு, போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்வதும் நாட்டின் முக்கிய பதவிகளில் உள்ள ஏனைய குற்றவாளிகளையும் அடையாளங்காண்பதுமே ஆகும். மாறாக சட்டக்கல்லூரிக்குத் தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கையை இன அடிப்படையில் கணிப்பீடு செய்வதும், இனரீதியான முரண்பாடுகளைத் தூண்டுவதுமல்ல என்று உளவுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மாதிபர் நிலந்த ஜயவர்தனவிற்கு பொலிஸ் மா அதிபர் தெளிவுபடுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். கடந்த 2012 ஆம் ஆண்டில் இயல்பிற்கு மாறான வகையில் சட்டக்கல்லூரிக்குத் தெரிவான முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பொன்று ஏற்பட்டிருப்பதாகக் கடந்த 2015 ஆம் ஆண்டில் புலனாய்வுப்பிரிவு அறிக்கைப்படுத்தியிருப்பதாக உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மாதிபர் நிலந்த ஜயவர்தன சாட்சியம் வழங்கியிருந்தார். இது குறித்த பத்திரிகைச் செய்திகளை மேற்கோள்காட்டி சமூகவலைத்தளங்களில் கடுமையான கண்டனங்கள் வெளியிடப்பட்டுவந்த நிலையிலேயே மங்கள சமரவீர இத்தகைய பதிவொன்றைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.