உரிமைகளுக்காக அஞ்சாமல் குரலெழுப்பக் கூடிய ஆளுமைகளை அடையாளங்கண்டு வாக்களியுங்கள்

breaking

இன்றைய சூழ்நிலை பெரும் விரக்தி தருவதாக அமைந்திருப்பதால் தமிழ் மக்களாகிய நாம் தேர்தலில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கிவிடவோ அல்லது சலுகைகளை பிரச்சாரம் செய்யும் கட்சிகள் பக்கம் சாய்ந்து விடவோ உந்தப்படலாம். அது தவறு என்பதை நாம் தெளிவாக வலியுறுத்த விரும்புகின்றோம் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெரிவிக்கும் விதத்தில் யாழ்பாண பல்கலைக்கழக மாணவர்ஒன்றியத்தியால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையின் முழு விபரங்கள் கீழ்வருமாறு

தமிழ் மக்களின் ஆயுத ரீதியான விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் நாம் மீண்டும் ஒரு பொதுத் தேர்தலை எதிர் கொள்கின்றோம்.

போர் மௌனிப்பின் பின் எம்மக்களின் சுயாதிபத்தியத்துக்கான போராட்டத்தை அரசியல் ரீதியாக முன் எடுக்க வேண்டும். இன அழிப்புக்கான பொறுப்புக் கூறலுக்கு இலங்கை அரசை சர்வதேச ரீதியாக உந்துவதன் மூலம் தமிழ் மக்களுக்கான பரிகார நீதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதிலிருந்து பிறக்கக்கூடிய ஒரு தீர்வே தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்யும் என்பதில் யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் எப்போதும் தெளிவாகவே இருந்து வந்திருக்கிறது.

ஆயினும் எமது கடந்த பத்தாண்டுகால அரசியல் பயணத்தை திரும்பிப் பார்க்கும் போது இவ்விடயங்களில் நாம் சிறிதும் முன்னேறவில்லை என்பது விரக்தி தரும் ஒரு விடயமாகவே இருக்கிறது.

இன்றைய நிலையில் தென்னிலங்கையில் பேரினவாத சக்திகள் பெருமளவில் உருத்திரண்டுள்ளன. இலங்கை ஒரு பௌத்த சிங்கள தேசம் என்பதை உறுதிப்படுத்துவதில் அவை முனைந்து நிற்பது வெள்ளிடை மலையாக உள்ளது. வடக்கிலே தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் சமய சாதீய முரண்பாடுகளையும் போரின் பின்னான வறுமை நிலையையும் தமக்கு சாதகமாக பயன்படுத்தி அரசியல் களத்தில் காலூன்றிவிட வேண்டும் என்ற பெரு விருப்போடு தென்னிலங்கைக் கட்சிகளும் வடகிழக்கிலுள்ள அவர்களின் முகவர்களும் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் தமிழ்தேசிய நிலைப்பாட்டிலிருந்து செயல்படுவதாக சொல்லும் கட்சிகள்இ கட்சிகளுக்குள்ளான உட்பூசல்களாலும் கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகளாலும் பிளவுண்டு சிதறுண்டவைகளாக இத்தேர்தலை எதிர்கொள்கின்றன.

சனாதிபதி தேர்தலை ஒட்டி இக்கட்சிகளுக்கிடையில் கொள்கையிலும் செயற்பாட்டிலும் ஒரு உடன்பாட்டை எட்ட நாம் மேற்கொண்ட முயற்சிகளையும் இக்கட்சிகள் பயனற்றவையாக்கி விட்டன.

எனவே இன்றைய சூழ்நிலை பெரும் விரக்தி தருவதாக அமைந்திருப்பதால் தமிழ் மக்களாகிய நாம் தேர்தலில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கிவிடவோ அல்லது சலுகைகளை பிரச்சாரம் செய்யும் கட்சிகள் பக்கம் சாய்ந்து விடவோ உந்தப்படலாம். அது தவறு என்பதை நாம் தெளிவாக வலியுறுத்த விரும்புகின்றோம்.

ஆகவே யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினராகிய நாம் எமது வழுவா தமிழ்த்தேசிய மரபின் நிலைநின்று பின்வரும் வேண்டுகோள்களை எமது மக்களிடம் முன்வைக்கின்றோம்.

· விரக்தி மனநிலையிலிருந்து விலகி வாக்களிக்க முன்வாருங்கள்

· தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் அர்ப்பணத்தோடு இருக்கும் கட்சிகளை தெரிவு செய்யுங்கள்

· கட்சி எல்லைகளுக்கப்பால் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அஞ்சாமல் குரலெழுப்பக் கூடிய ஆளுமைகளை அடையாளங்கண்டு வாக்களியுங்கள். இதன் மூலம் தேர்தலுக்கு முன் எம்மால் எட்டப்பட முடியாமல் போன ஒற்றுமையை தேர்தலின் பின்னாவது செயற்படு தளத்தில் எட்ட முடியுமென்று நாம் நம்புகிறோம்.

· முப்பது ஆண்டு கால போராட்டத்தில் நாம் இழந்தவை பெரிது. அவற்றின் கைமாறு இன்றில்லாவிட்டாலும் என்றாவது கிட்டவேண்டும் என்பதில் உறுதியாக இருப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.