கேரளா, மூணாறு நிலச்சரிவு: உயிரிழப்பு 17 ஆக உயர்வு- பெரும்பாலானோர் தமிழர்கள்

breaking
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு மரணித்தவர்களில் 9 பேர் தமிழர்கள் எனத் தெரியவந்துள்ளது. கேரளாவின் இடுக்கி, மலப்புரம் மற்றும் வயநாடு பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில் அப்பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மூணாறு, ராஜமலை குடியிருப்புப் பகுதியொன்றில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டதில் சுமார் 20 வீடுகள் மண்ணில் புதையுண்டன. இவ்வாறு, வீடுகளுடன் மண்ணுக்குள் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் 15பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதுடன் 65இற்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தற்போதுவரை 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.