இழப்பீடு வழங்குவதில் தமிழர்களுக்குப் பாகுபாடு! பழ. நெடுமாறன் கண்டனம்

breaking
மூணாறு அருகே தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பின் மீது மண் சரிவு ஏற்பட்டு 43 தமிழர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், 28 தமிழர்களின் நிலை என்னாயிற்று என்பது தெரியவில்லை. துயரம் மிகுந்த இந்த நிகழ்ச்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கும்  கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மூணாறில் இறந்தவர்களின் உறவினர்கள் பலர் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்கள் அங்கு செல்வதற்கும், இறந்தவர்களின் உடல்களைப் பெற்று சொந்த ஊர்களுக்குக் கொண்டுவந்து அடக்கம் செய்வதற்குமான உதவிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வரை வேண்டிக்கொள்கிறேன். இறந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 10 இலட்சமும் கோழிக்கோடு விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூபாய் 20 இலட்சமும் அளிக்கப்படுமென  கேரள முதல்வர் அறிவித்திருக்கிறார். மூணாறில் உயிரிழந்தவர்கள் தமிழர்கள் என்பதால், இத்தகைய பாகுபாடு காட்டப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இறந்த தமிழர்களின் குடும்பங்களுக்கும் ரூபாய் 20 இலட்சம் வழங்குமாறு கேரள முதல்வரை வேண்டிக்கொள்கிறேன்.