லிந்துலையில் வீடுகள் தீக்கிரை!

breaking
பம்பரக்கலை மத்திய பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த வீடுகள் முற்றாக சேதமடைந்ததுடன், இந்த வீடுகளில் குடியிருந்த 24 குடும்பங்களைச் சேர்ந்த 70 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இரவு 10 மணியளவில் இவ்வாறு திடீரென தீ பரவியுள்ளது. இதனையடுத்து, வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, அயலவர்கள் விரைந்து தீயை அணைக்க முற்பட்டபோதும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. அதனையடுத்து லிந்துலை பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன்,  சுமார் 3 மணித்தியாலயத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இத்தீவிபத்தில் எவ்வித உயிர் ஆபத்தோ, காயங்களோ ஏற்படாத போதிலும் உடைமைகளுக்கு பெரும் தேதம் ஏற்பட்டுள்ளது. தீவிபத்து காரணமாக பலரது அத்தியாவசிய ஆவணங்கள் உடுதுனிகள், தளபாடங்கள் போன்றன தீக்கிரையாகியுள்ளன. இந்த விபத்தினால் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களைச் சேர்ந்த 70 பேர் தற்காலிகமாக தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையம், உறவினர் மற்றும் அயலவர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிவாரண உதவிகள் தோட்ட நிர்வாகம் மற்றும் அக்கரப்பத்தனை பிரதேச சபை ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளது. இத்தீ விபத்து மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் சேதவிபரங்கள் தொடர்பாகவும் லிந்துலை பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.