அமெரிக்க அரசியல் தலைவர்கள் 11 பேர் மீது சீனா பொருளாதார தடை

breaking
உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான மோதல் நீடிக்கிறது. இரு நாடுகளின் உறவும் மிகவும் மோசமடைந்துள்ளது. இதனிடையே ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்தியதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில் சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக கூறி அமெரிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் தலைவர்கள் 11 பேர் மீது சீனா பொருளாதார தடையை அறிவித்துள்ளது.
இந்த 11 பேரில் அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களான மார்கோ ரூபியோ மற்றும் டெட் குரூஸ் ஆகிய இருவரும் அடங்குவர். இவர்கள் இருவரும் சீனாவுக்குள் நுழைவதற்கு அந்த நாடு ஏற்கனவே தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பொருளாதார தடை குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில், “பட்டியலிடப்பட்டுள்ள இந்த 11 பேரும் ஹாங்காங் தொடர்பான பிரச்சினையில் மோசமாக செயல்பட்டவர்கள் ஆவர். சீனா தனது இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு எதிரான செயல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது” எனக் கூறினார்.