அராலிப் பகுதியில் துப்பாக்கியுடன் இருவர் கைது!

breaking
யாழ். அராலி பகுதியில் துப்பாக்கி மற்றும் வாள்களை தம்வசம் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், அராலி பகுதியில் உள்ள இளைஞர் குழு ஒன்றிடம் துப்பாக்கி மற்றும் வாள்கள் உள்ளன என வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞர்கள் குழு வசிக்கும் பகுதியில் நேற்றைய தினம் தேடுதல் நடத்தினார்கள். அதன் போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கட்டுத் துப்பாக்கி (இடியன்) ஒன்றும் வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த இரு இளைஞர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் எட்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவர்களிடம் வாக்கு மூலங்களை பெற்று அவர்களை விடுவித்துள்ளனர். அதேவேளை முன்னதாக கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.