இதுவரை காலமும், அதாவது 35 வருட காலமாக மக்களின் பாவனையில் இருந்த உள்ளக வீதி ஒன்றினை முற்றாக மறித்து முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்திற்கு ஊடாக மாவீரர்கள் விதைக்கப்பட்ட இடத்திற்கு மேலாக குறிப்பாக எதிரிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பிரிக்கேடியர் பால்ராஜ் விதைக்கப்பட்ட இடத்திற்கு மேலாக நேற்றைய தினம் இவ்வீதியானது அமைக்கப்பட்டுள்ளது.
பழைய பாதையினூடாகவே மின்சாரக் கம்பங்களும் , இலங்கை தொலைத்தொடர்பு சேவையினரின் வடக்கம்பங்களும் மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ளன. முதலிருந்த வீதியினைப் பயன்படுத்தி வந்த குடும்பங்கள் தற்போது போக்குவரத்து செய்ய வழியின்றி தவிக்கின்றனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
குறித்த காணியின் உரிமையாளர் கடந்த 30 வருட காலமாக கனடாவில் வசித்து வருகின்றார் தற்போது அவருடைய சகோதரி தான் இந்த பாதை மாற்றும் வேலையை செய்து வருகின்றார். அத்தோடு இதற்கு முக்கியமாக முள்ளியவளை கிழக்கைச் சேர்ந்த இரு குடும்பங்கள் தான் முன்னின்று இந்த பாதையை அமைக்க தூண்டியிருக்கிறார்கள் என்பதை அப்பகுதியில் வசிக்கும் குடும்பங்களை விசாரித்தபோது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பிரதேச சபையினரை இந்த சம்பவம் தொடர்பாக பார்த்து செல்ல அழைத்தும் அவர்கள் சமூகமளிக்கவில்லை என அப்பகுதியில் வசிக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே இது தொடர்பாக அக்கறை செலுத்தவேண்டியவர்கள் தங்கள் பார்வையினை அவ்விடம் நோக்கி செலுத்தி உரிய தீர்வினை பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கையில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எதிர்பார்த்திருக்கின்றார்கள்.