வடதமிழீழம், முல்லைத்தீவு நீதிமன்ற சிறைக்கூடத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பியோடியுள்ளதாக முல்லைத்தீவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு, செல்வபுரம் பகுதியில் கடந்த 23.05.2018 அன்று இளைஞர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த 31.05.2018 அன்று முல்லைத்தீவு காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் குறித்த நபர் விசாரணைக்காக நேற்று முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டிருந்தார்.
அத்துடன் கடந்த 27.06.2018 அன்று முல்லைத்தீவு நகர் மற்றும் கள்ளப்பாடு உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 7 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அதில் 3 பேர் நேற்று விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த நால்வரும் விசாரணைக்காக நீதிமன்ற சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த வேளை நீதிமன்ற சிறைச்சாலை காவல்துறையினருக்கு தெரியாத வகையில் தப்பியோடியுள்ளனர். இவர்களைத் தேடும் பணியில் முல்லைத்தீவு காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.