ஶ்ரீலங்கா, போருக்குப் பின்னர் இலங்கையின் நிலைமைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்ற நிலைமைகள் போதுமானதாக இல்லை. முன்னேற்றம் மிகவும் மந்தமாக அமைந்துள்ளது.
இவ்வாறு சுவிட்ஸர்லாந்தின் முன்னாள் அரச தலைவரும், அந்த நாட்டின் சமஸ்டிப் பேரவையின் உறுப்பினரும், சட்டம் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் அதிகாரிமான சிமோனேட்டா விடம் சுட்டிக்காட்டியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்.
இலங்கை வந்துள்ள சிமோனேட்டாவை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நேற்றுத் திருகோணமலையில் சந்தித்தித்துக் கலந்துரையாடினார். அதன்போதே அவர் இவ்வாறு சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்தச் சந்திப்புத் தொடர்பில் இரா.சம்பந்தன் தெரிவித்ததாவது:-
அனைத்து மக்களும் சமத்துவமாகவும், கௌரவமாகவும் வாழும் வகையிலான புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதற்குப் பன்னாடுகள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டினேன். தமிழ் மக்கள் தொடர்பாகப் பல விடயங்கள் பேசப்பட்டன.
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், மீள்குடியமர்வு, புதிய அரசமைப்பு உருவாக்கம் போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவாகப் பேசினோம். முன்னேற்றங்கள் ஏற்படுத்துவதில் பெரும் தாமதம் நிலவுகின்றது என்பதை எடுத்துக் கூறினேன்.
இந்த விடயங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படவேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்தேன்.
அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டியது மிக முக்கியமானதாகும். பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வை உள்ளடக்கிய அரசமைப்பை உருவாக்க வேண்டும். அனைத்து மக்களும் சமத்துவத்துடனும், கௌரவத்துடனும் வாழும் வகையிலான அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று அவரிடம் எடுத்துக் கூறினேன்.
இந்த விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் என்றும், இலங்கை அரசுடன் இந்த விடயங்கள் தொடர்பில் தொடர்ந்தும் தொடர்பில் இருக்கிறோம் என்று சுவிட்ஸர்லாந்துப் பிரதிநிதி தெரிவித்தார்– – என்றார்.