அராலியில் மர்ம மனிதர்கள் நடமாட்டம், விழிப்புகுழு அமைக்க திட்டம்!

breaking

வட தமிழீழம் , யாழ்.அராலி பகுதியில் குள்ள மனிதர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக அராலி பகுதியில் உள்ள சகல கிராமங்களிலும் தலா 10 இளைஞர்களும் 3 சிறிலங்கா காவல்துறையினருமாக தலா 13பேர் கொண்ட விழிப்புகுழு அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழுக்கள் இரவு நேர ரோந்து நடவடிக்கையை முன்னெடுக்கும். உடனடியாக அந்தக் குழுக்கள் அமைப்படும்” என்று யாழ்.பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.அராலி பகுதியில் கடந்த சில வாரங்களாக அந்தப் பகுதி மக்களை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக குள்ள மனிதர்கள் போன்று இருப்பதாகவும், பாயும் சப்பாத்துக்களை அணிந்தவாறும், முகம் மற்றும் உடல் முழுவதையும் கறுப்பு உடையினால் மறைத்தவாறு வரும் சிலரே இவ் அச்சுறுத்தல் செயற்பாட்டில் ஈடுபடுவதாக அப் பகுதி மக்கள் பலரும் தெரிவித்தனர்.

இவ்வாறு வருவோர் வீட்டின் கூரைகள் மீது கல்லெறிந்து தாக்குவதாகவும் வீட்டில் இருப்பவர்களது கண்களில் தென்படும் வகையில் பதுங்கி இருந்து விட்டு பின்னர் பாய்ந்து செல்வதாகவும் அப் பிரதேச வாசிகள் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அரச அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் காவல்துறையினர் , சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் அப் பிரதேச மக்கள் ஆகியோருக்கிடையில் ஆலோசனை கூட்டமொன்று அராலி அம்மன் கோவிலடியில் இன்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது.

பாதிக்கப்பட்ட மக்கள் பலரும் தாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக குறிப்பிட்டிருந்தனர்.

மேற்படி சம்பவத்தினால் தினமும் இரவுப் பொழுதை அச்சத்துடனேயே கழிப்பதாகவும், இளைஞர்கள் ஊர்களில் அதிகாலை மூன்று மணிவரை காவல் செய்வதாகவும்,

இதனால் அவர்களால் மறு நாள் ஒழுங்காக தொழிலுக்கு செல்லவோ அல்லது மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளுக்குச் செல்லவோ முடியாத நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

எனவே இந்தப் பிரச்சனைக்கு தீர்வொன்றை வழங்குமாறும்

அப் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினர் ரோந்து நடவடிக்கைகளை அதிகப்படுத்துமாறும் மக்கள் சார்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.