வடதமிழீழம், வவுனியாவில் நீண்டகாலமாகப் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று வவுனியாப் காவல்துறையினர் தெரிவித்தனர். அவருடன் பயணித்த ஆணும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் பெண் நீண்டகாலமாகப் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தார். நேற்றுப் போதைப் பொருளை விற்பனை செய்யும் நோக்குடன் உந்துருளியில் சென்றபோது உக்கிளாங்குளத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது. அவரிடமிருந்து 430 மில்லிகிராம் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண் 32 வயதுடையவர் என்றும், அவருடன் 42 வயதான ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டார் என்றும் தெரிவித்த காவல்துறையினர், அவர்கள் பயணித்த உந்துருளியும் கைப்பற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
வன்னி மாவட்டப் பிரதிப் காவல்துறை மா அதிபர் அனுர அபேவிக்கிரமவின் பணிப்பின்பேரில் காவல்துறை அத்தியட்சகர்களான எம்.தென்னக்கோன், மல்வளகி ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காவல்துறை கொன்ஸ்டபிள் நிரோசனின் தகவலுக்கு அமைய காவல்துறை பொறுப்பதிகாரி ஜ.பி.பொன்சேகா தலைமையில் போதை ஒழிப்புப் பிரிவு உப பரிசோதகர் நசீம், கொன்ஸ்டபிள்களான நுவான், அசேல, தரிந்து ஆகியோரைக் கொண்ட குழு இந்தக் கைது நவடிக்கையை மேற்கொண்டது என்று தெரிவிக்கப்பட்டது.