வடதமிழீழம், மயிலிட்டித் துறைமுகம் 425 மில்லியன் ரூபா செலவில் இரண்டு கட்டங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. முதல் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஶ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரி பால சிறிசேனவால் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கான அரச தலைவர் செயலணியின் செயலர் வே.சிவஞானசோதி அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-,
போருக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையின் மீன்பிடி உற்பத்தியில் 30 சதவீதத்துக்கு மேல் பங்களிப்புச் செய்த ஒரு பிரபல்யமான மீன்பிடி துறைமுகம் மயிலிட்டி. இந்தத் துறைமுகம் போரால் செயலிழந்தமை வடக்கு மாகாணத்துக்கும் தேசிய உற்பத்திக்கும் பெரிய பாதிப்பாக அமைந்தது.
நல்லாட்சி அரசின் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 150 ரூபா மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது. இதன்கீழ் 50 மீற்றர் நீளமான கப்பல்துறை சுவர் (குவே வோல்), ஹார்பர் பேசின் மற்றும் நுழைவாயிலை ஆழப்படுத்துதல், அலை தடுப்பு கட்டுமானம், அலைதாங்கி, இறங்குதுறை மறுசீரமைப்பு, எரிபொருள் நிரப்பும் நிலையம், குளிரூட்டப்பட்ட அறைகள், நீர் மற்றும் மின்சார வழங்கல் என்பன போன்றவை அபிவிருத்தி செய்யப்படும்.
ஜக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்சித் திட்டத்தின் கீழ் ரூபா 30 மில்லியன் நிதியில் நிர்வாகக் கட்டடம், மீன்பிடி வலைகள் பின்னும் நிலையம், நீர்தாங்கிகள், கழிவறைகள் என்பன அபிவிருத்தி செய்யப்படும்.
இரண்டாம் கட்டமாக ரூபா 245 மில்லியனில் அலைத் தடுப்பு கட்டுமானத்தின் முழுமையான மறுசீரமைப்பு, ஏலமிடும் நிலையம், ஹார்பர் பேசின் மற்றும் நுழைவாயிலை மேலும் ஆழப்படுத்துதல் என்பன மேற்கொள்ளப்படும் – என்றுள்ளது.
இன்றைய நிகழ்வில் மீன்பிடி அமைச்சர் விஜித் விஜிதமுனிசொய்சா, பிரதி அமைச்சர் அமீர் அலி, இராஜங்க அமைச்சர் திலீப் வெதஆராச்சி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்