கலவரத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு மரண தண்டனை.!

breaking
எகிப்தில்  2013-ம் ஆண்டில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. எகிப்து நாட்டில் கடந்த 2013-ம் ஆண்டில்  முஹம்மது மோர்சி அதிபர் பதவியில் இருந்து ராணுவத்தால் வெளியேற்றப்பட்டார். அவரது ஆட்சியை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில்  அவரது கட்சியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் தலைநகர் கெய்ரோவில் முகாம்கள் அமைத்து போராட்டம் நடத்தினர். அவருக்கு ஆதரவாக முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்தவர்களும் போராட்டங்களில் குதித்தனர். அவர்களை கலைக்க முயன்ற ராணுவத்தினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் சுமார் 600 பேர் கொல்லப்பட்டனர். கலகத்தில் ஈடுபட்டதாக முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  அவர்களில் சுமார் 739 பேர் மீதான வழக்கு விசாரணையில் பலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிலர் தூக்கிலிட்டும் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் உட்பட 75 பேருக்கு மரண தண்டனை விதித்து இன்று கெய்ரோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.