சாலைகளில் ஈருருளிகளில் சென்ற இரு பெண் களின் கைப்பைகளை உந்துருளியில் வந்த ஒரே நபர் வெவ்வேறு இடங்களில் வைத்து அபகரித்துள்ளார். மூன்றாவது இடத்தில் மகளுடன் சென்ற தாய் கைப்பையை கை விடாமல் சத்தமிட்டதால் முயற்சியைக் கைவிட்டு தப்பியோடியுள்ளார்.
இந்தச் சம்பவங்கள் நேற்று முற்பகல் 10.00 மணிக்கும் 12 மணிக்குமிடையில் நுணாவில் கிழக்கு, கற்குளி, டச்சு சாலை ஆகிய இடங்களில் நடந்துள்ளன.
நுணாவில் மேற்கு கல்லடி மூட்டு பகுதியிலும் கற்குழிப் பகுதியிலும் ஈருருளிகளின் முன் கூடைக்குள் வைக்கப்பட்டிருந்த கைப்பைகளை அபகரிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரியில் நகை எடுத்துக் கொண்டு மகளுடன் ஈருருளியில் சென்ற பெண்ணின் கைப்பையை தோளிலிருந்து பறிக்க முற்பட்ட வேளையில் கைப்பையை இறுக்கமாகப் பிடித்த பெண் கூக்குரலிடவே திருடன் தப்பியோடியுள்ளான்.
மூன்று பெண்களும் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஒரே நபரே வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார் என நம்பப்படுகிறது.
கைப்பைகளில் பணம் அலைபேசிகள் உட்பட ஆவணங்கள் இருந்தன என்று கைப்பைகளை பறி கொடுத்தவர்கள் தெரிவித்தனர்.