பாப் இசைப்பாடகி மாயா விடுத்துள்ள கோரிக்கை.!

breaking
அவுஸ்திரேலியாவில் இருந்து அகதிகள் நாடுகடத்தப்படுவதற்கு அவுஸ்திரேலியன் எயர்லைன்ஸ் விமானசேவை உதவக்கூடாது என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழீழத்தை  பூர்வீகமாக கொண்ட  எம்.ஐ.ஏ என்று அழைக்கப்படும் பாப் இசைப்பாடகி மாதங்கி (மாயா) அருள்பிரகாசம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்  அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை பலவந்தமாக நாடு கடத்தும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நடவடிக்கைளிற்கு அவுஸ்திரேலியன் எயர்லைன்ஸ் விமானசேவை உதவக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். அண்மைய சில நாட்களில் 12 தமிழர்களையும் ஒரு ஈராக்கிய பிரஜையையும் அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடு கடத்தியுள்ள நிலையிலேயே அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். “அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் நடத்தப்படும் விதம் குறித்த செய்திகள் பயங்கரமானவையாக விளங்குகின்றன. அவுஸ்திரேலிய அரசாங்கம் அகதிகளையும், புகலிடக்கோரிக்கையாளர்களையும் கௌரவத்துடன் நீதியாக நடத்தாவிட்டால் அந்த அகதிகள் தங்கள் வாழ்க்கையை மீள கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டியது எங்கள் கடமை. நாடுகடத்தப்படுதல் என்பது ஒரு தீர்வல்ல. தமிழீழத்தில்  உள்ள தமிழர்களை பொறுத்தவரை ஐக்கிய நாடுகள் உட்பட பல அமைப்புகள் அங்கு சித்திரவதைகள் அச்சுறுத்தல்கள் தொடர்வதாக தெரிவித்துள்ளன. இலங்கை அரசால் பலவந்தமாக காணாமல்போகச்செய்ய்பட்ட ஆயிரக்கணக்கானவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கான விடை இன்னமும் கிடைக்கவில்லை. அகதிகள், புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளில் பங்குகொள்ள மறுப்பதன் மூலம் விமானசேவைகள் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான பங்களிப்பை வழங்கலாம்” என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளையில்   அவுஸ்திரேலிய அகதிகளுக்காக ஒரு பாடலைப் பாடி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.