தமிழ் மக்கள் தமது உரிமைகளைக் கேட்டால் பயங்கரவாதி, தீவிரவாதி, புலி என்று நாமஞ் சூட்டி அவர்கள் வாய்களை அடைத்து விடுகின்றார்கள். இதனால்த்தான் எம் தலைவர்கள் எமக்கேன் இந்த வம்பு? என்று ஆற்றுப்படுத்தலுக்குள் அகப்பட்டு நிற்கின்றார்கள்.
இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழா கொழும்பில் நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இரண்டு நாள்களுக்கு முன்னர் ஒரு பத்திரிகைச் செய்தி வாசித்தேன். இன்று வடக்கில் செயற்படும் ஆவாக்குழு உறுப்பினர்கள் வடமாகாண முதலமைச்சரின் முன்னாள் புலி உறுப்பினர்களே. விடுதலைப்புலிகளின் சிந்தனை, இனவாதம் மற்றும் ஈழப் பிரிவினை வாதத்தை அவர் அங்குள்ள இளையோர் மத்தியில் ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றார், என்று பொது எதிரணி உறுப்பினர் ஒருவர் கூறியதாகச் செய்தியைக் கண்டேன். இதன் தாற்பரியம் என்ன?
தமிழ் மக்கள் தமது உரிமைகளை, உரித்துக்களை, தன்மானத்தை எப்பொழுது வலியுறுத்தப் பார்க்கின்றார்களோ அப்போது அவ்வாறான காரியங்களில் ஈடுபடுவோர்களைத் தீவிரவாதிகள் என்றோ, பயங்கரவாதிகள் என்றோ, புலிகள் என்றோ, வன்முறையைத் தூண்டி விடுபவர்கள் என்றோ, நாட்டைப் பிரிப்பவர்கள் என்றோ அவர்களை அடையாளப்படுத்தி அவர்களைப் பின்வாங்க வைத்துவிடுவார்கள். இதற்குப் பயந்தே எமது தமிழ்த் தலைவர்கள் பெரும்பான்மையினர் தருவதாகக் கூறும் அரசியல் தீர்வுகளுக்குச் சம்மதம் தெரிவித்து வருகின்றனர்.
பிரச்சினை எமது, பாதிக்கப்பட்டோர் நாங்கள், எமது வருங்காலமே எமது கரிசனை ஆனால் தீர்வானது தம்மால்த்தான் தரப்பட வேண்டும் என்ற மனோநிலையில் பெரும்பான்மையினர் இருக்கின்றார்கள்.
சிறுபான்மையினரை அடக்கி ஆள வேண்டும் என்ற எண்ணங்களிலிருந்து இன்றும் மாறவில்லை. தம்மை மாற்றவோ, உண்மையை உணரவோ, உலக நாடுகளின் மனித உரிமைக் கோட்பாடுகளை மதிக்கவோ அவர்கள் இப்பொழுதும் தயாரில்லை.
மனிதப் படுகொலை செய்த இராணுவத்தினரை தண்டிக்கப்படாது என்பதே எமது அரச தலைவரின் திடமான எதிர்பார்ப்பு. அதாவது இந்த நாடு எங்களுடையது. சிறுபான்மையினர் வந்தேறு குடிகள். மரத்தைச் சுற்றி வளரும் கொடிகள் போன்று எமக்கு அனுசரணையாக சிறுபான்மையினர் இந்த நாட்டில் வாழ வேண்டுமே ஒளிய தமக்கென உரித்துக்கள் எவற்றையும் பெற எத்தனிக்கப்படாது என்பதே அவர்கள் கருத்து என்றார்.