எழுவர் விடுதலை தொடர்பாக முன்னாள் நீதிபதியின் புதிய தகவல்!

breaking
இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு எழுவர் விடுதலையை மேலும் மேலும் அரசியலாக்காமல், மனிதாபிமான கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன் கூறியுள்ளார். ஏழு தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுவிக்க வலியுறுத்தி மதுரை கோ.புதூரில் நேற்றைய தினம் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி து.அரிபரந்தாமன் கலந்து கொண்டு பேசிய போது, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் இந்த ஏழு பேரும் நேரடியாக ஈடுபடவில்லை. ஆனால் நேரடியாக கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்று வரும் பலரை தமிழக அரசு தலைவர்கள் பிறந்தநாட்களை முன்னிட்டு விடுவித்து வருகின்றனர். ஆனால், இவர்களை விடுவிப்பதில் மட்டும் தொடர்ந்து அரசியல் லாபத்துடன் செயல்பட்டு வருகின்றனர். சிறையில் இருக்கும் ஏழு பேரின் குடும்பத்தினரும் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது பெற்றோர்கள் தங்களது கடைசிக் காலத்தை பிள்ளைகளுடன் கழிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இதை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை. மகாத்மா காந்தியைக் கொலை செய்தவர்களையே பதினாறு ஆண்டுகளில் விடுதலை செய்தனர். ஆனால், 28 ஆண்டுகள் கடந்தும் இந்த ஏழு தமிழர்களும் விடுதலை செய்யப்படவில்லை. ராகுல் காந்தி குடும்பமே மன்னித்து விட்டதாக கூறிவிட்ட நிலையில், இதற்கு அவர்களது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இதற்கு பாஜக தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. எழுவர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கை பாஜக நடத்தி வருகிறது. அனைத்து கொள்கைகளிலும் காங்கிரஸ் எதிர்க்கும் பாஜக, இந்த விஷயத்தில் மட்டும் ஆதரிப்பது ஏன் என புரியவில்லை. இதன் பின்னால் உள்ள அரசியலை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஏழு பேரும் தமிழர்களாக இருப்பதால் தான் அவர்களது விடுதலை தாமதமாகிறது என நினைக்கிறேன். எழுவர் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவையின் முடிவை ஆளுநர் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நிராகரிக்கும் உரிமை அவருக்கு இல்லை. ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 15 பேரின் குடும்பத்தினர் எழுவர் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இது அரசியல் கட்சியினரின் தூண்டுதலினால் தொடரப்பட்ட வழக்கு என்பது என்னுடைய கருத்து. அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்றால், செய்யாத குற்றத்துக்காக சிறையில் இருக்கும் எழுவரின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டவர்கள் தான். அவர்களது தரப்பு நியாயத்தையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். இதை மேலும் அரசியலாக்காமல் மனிதாபிமான கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும். எனவே தமிழர்கள் அனைவரும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து எழுவர் விடுதலை தொடர்பாக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார். இக் கூட்டத்தில் வழக்குரைஞர் லஜபதிராய், பேராசிரியர் இரா.முரளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.