மோடிக்கு அமைதிக்கான நோபல் விருதுக்கு அனைவரும் கைகோர்க்க -தமிழிசை ?

breaking
10 கோடி ஏழை குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை பலன் பெறலாம்.
நாட்டின் 72-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி, பிரதமர் நரேந்திர மோடி மூவர்ணக் கொடியேற்றி உரை ஆற்றினார்.
அன்று அவர் அறிவித்த மகத்தான திட்டம்தான், ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகும்.
இதுபற்றி அவர் பேசுகையில், “உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டமாக ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தை அறிமுகம் செய்யப்போகிறோம். இதன் மூலம் நாட்டில் உள்ள 10 கோடி ஏழை குடும்பங்கள் பலன் அடையும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையில் மருத்துவ காப்பீடு வசதி அளிக்கப்போகிறோம். இதன் மூலம் 50 கோடி பேர் மருத்துவ காப்பீட்டு பலன் பெற முடியும்” என்று குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்வடிவம் பெற்று உள்ளது.
இந்த திட்டத்தை ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி நகரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (23-ம் தேதி) தொடங்கி வைத்தார். அங்குள்ள பிரபாத் தாரா மைதானத்தில் நடந்த விழாவில் பயனாளிகள் சிலருக்கு அவர் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் சுகாதார அட்டைகளை வழங்கினார்.
இந்தநிலையில்,  தமிழக பாஜக தலைவர் தமிழிசை டுவிட்டரில்,  ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை கொண்டுவந்த பிரதமர் மோடிக்கு 2019-ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு விருதுக்கு தேர்வு செய்ய என்னுடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்று  வேண்டுகோள்விடுத்துள்ளார்.