ஶ்ரீலங்கா ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா தலமையகம் முன் ஆர்ப்பாட்டம்
ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகம் முன்பாக இன்று 25 ஆம் திகதி புலம்பெயர்ந்த தமிழ் அமைப் பினரால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
இன்றைய தினம் அமெரிக்க நேரப்படி நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் போதான மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றங்களுக்கு நீதிகோரியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிர்ப்புத் தெரிவித்துமே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக கனடாவில் இருந்தும் புலம்பெயர்ந்த தமிழர்கள் நியூயோர்க்கிற்கு வருகை தரவுள்ளனர். இதற்காக டொரன்டோ நகரிலிருந்து விசேட பஸ் சேவைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான உயர்மட்டக் குழு ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ளது. பொதுச்சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றவுமுள்ளார்.
இந்த வேளையிலேயே புலம்பெயர்ந்த தமிழ் அமைப்பினரால் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.