தமிழினப்படுகொலை காங்கிரஸ் தான் காரணம் என பிரபாகரனே வந்து சொல்ல வேண்டுமா?

breaking
இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தான் காரணம் என விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே வந்து சொல்ல வேண்டுமா என, மத்திய இணையமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார் “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கும் 2009ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கும் காரணம் காங்கிரஸ் தான். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்யக் கூடாது என தமிழக காங்கிரஸ் வலியுறுத்துகின்றது. 7 உயிர்களை வைத்துக் கொண்டு அரசியல் நடத்த வேண்டாம். அவர்கள் சிறையில் நிம்மதியாக இருக்கிறார்களென்றால் இருந்துவிட்டு போகட்டும். ஆளுநர் முடிவின் அடிப்படையில் வெளியில் வந்தால் வந்துவிட்டு போகட்டும். இதனை பகடைக்காயாக பயன்படுத்த வேண்டாம். இந்த நிலைமைக்கு காரணம் திமுக-காங்கிரஸ் மற்றும் அவர்களுடைய கூட்டணி கட்சிகளே பொறுப்பு. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவே இதனை சொல்லி விட்டார். இதனை பிரபாகரனே வந்து சொல்ல வேண்டுமா? அவர் வர மாட்டார் என தெரியும். விடுதலை புலிகள் அமைப்பில் முன்பிருந்தவர்கள் எத்தனையோ பேர் இதனை சொல்லி விட்டனர். தமிழ் சமூகத்திற்கு காங்கிரஸ் செய்த துரோகம். இதற்கு ஒருகாலமும் விடிவு காலம் கிடையாது. இலங்கையில் ஒன்றரை லட்சம் பேர் எப்படி அடையாளம் தெரியாமல் ஆக்கப்பட்டார்களோ, அதேபோன்று காங்கிரசும் ஆக்கப்பட்டால் தான் தமிழகம் இறந்தவர்களுக்கு உண்மையான அஞ்சலி செலுத்தியது என்று அர்த்தம்” என கூறியுள்ளார்.