சிறிசேனாவை கொல்ல முயற்சித்த இந்தியர் கைது.!

breaking
இலங்கையில்  மைத்ரிபால சிறிசேனாவை கொல்ல முயற்சி செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.   இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபயா ராஜபக்சே உள்ளிட்டவர்களை கொல்ல முயற்சி செய்யப்பட்டதாக தொலைபேசி உரையாடல் ஒன்று சமீபத்தில் வெளியானது. ‘ஊழலுக்கு எதிரான படை’ என்ற அமைப்பை சேர்ந்த நாமல் குமாரா என்பவர் இதை வெளியிட்டார். இந்நிலையில், நாமல் குமாராவுடன் தொடர்புடைய தாமஸ் என்ற இந்தியரை இந்த விவகாரத்தில் காவல்துறை  நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். இவர் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்தவர். தாமசை நேற்று முன்தினம் நாமல் குமாராவின் வீட்டில் கைது செய்ததாக காவல்துறை தெரிவித்தனர். அவரை காவலில் எடுத்து விசாரித்து, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நாமல் குமாராவுடன் உள்ள தொடர்பு குறித்து டிஐஜி சில்வாவிடம் சிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, நாமல் குமாரா வெளியிட்ட தொலைபேசி உரையாடலின் உண்மை தன்மையை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.