கண்ணீருடன் வாழும் தமிழ் மக்கள்: சிவசக்தி ஆனந்தன் கவலை

breaking
ஆயிரக்கணக்கான எமது தமிழ் மக்கள் தினமும் எங்கையே ஒரு மூலையில் கண்ணீருடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரியில் நேற்று இடம் பெற்ற தொழில் நுட்ப ஆய்வு கூட திறப்பு விழா நிகழ்வில் கலந்த கொண்டு உரையாற்றுகையிலே அவர் தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரிவித்ததாவது, தங்களுடைய பிள்ளைகளை காணவில்லை, தங்களது பிள்ளைகள் சிறைகளில் இருக்கின்றனர். நீண்டகாலம் ஆகியும் விடுதலை செய்யப்படவில்லை எனவும் இரணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் உறவுகள் துன்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்றுடன் 600 நாட்கள் கடந்து 5 மாவட்டங்களில் பெற்றோர்கள் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட தங்களுடைய பிள்ளைகள் இருகின்றார்களா? இல்லையா ?என்று தெரியாமல் வீதிகளில் இருகின்றார்கள். அனுராதபுரம் சிறைச்சாலையில் 10 தொடக்கம் 24 வருடங்கள் சிறையில் இருக்கின்றவர்கள் எப்போது விடுதலையாகி வெளியே வருவார்கள் என்று காத்திருக்கின்றார்கள். இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் யுத்தகாலத்திலே தங்கள் பிள்ளைகளை பெற்றோர்களை இழந்து கண்ணீர் வடித்து கொண்டு இருக்கின்றார்கள் . இவ்வாறான கொடிய யுத்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சமூகம் என்ற வகையில் அவ் வீழ்ச்சியில் இருந்து மீட்பு பெற வேண்டும் என்றால் கல்வியின் மூலம் துறை சார்ந்த நிபுணர்களாக வருவதன் மூலமே யுத்த வடுக்களில் இருந்து நிவர்த்தி செய்ய முடியும். அத்துடன் துறை சார்ந்த நிபுணர்களாக வருவது மட்டும் இன்றி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு எமது சேவையை வழங்க முன்வர வேண்டும் என மேலும் தெரிவித்தார்.