வனவளத் திணைக்களத்தின் காணிபறிக்கும் படலம் முல்லைத்தீவில் தொடர்த வண்ணமே உள்ளது. தற்போதும் 100 ஏக்கர் தமிழர் காணிகளை அபகரித்து எல்லையிடப்பட்டுள்ளளது என்று மக்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனால் 40 குடும்பங்களின் வாழ்வாதாரம் முடக்கப்பட்டு அவர்கள் நிர்க்கதியாகியுள்ளனர்.
முல்லைத்தீவு, செம்மலை புளியமுனைப் பகுதியில் உள்ள மக்களது தோட்டக் காணிகளே இவ்வாறு அபரிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு கொக்குத்தொடுவாய் முதன்மை வீதியின் மேற்குப் புறமாக உள்ள புளியமுனைப் பகுதியில் உள்ள சுமார் 720 ஏக்கர் காணிகள் 1972 ஆம் ஆண்டுகளில் செம்மலையில் உள்ள 350 மக்களுக்குப் பயிர்ச் செய்கைக்கென அரசால் வழங்கப்பட்டது.
அன்றிலிருந்து அந்த மக்கள் அந்தக் காணிகளில் வயல் மற்றும், கச்சான், சோளம் போன்ற உப உணவுப் பயிர்ச் செய்கையிலும் ஈடுபட்டனர். போர் இடம்பெற்ற காலத்தில அங்கு பயிர் செய்ய முடியாமல் அந்தக் காணிகள் விடப்பட்டன.
எனினும் போரின் பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளாக காணிகளின் ஒரு பகுதியை துப்புரவு செய்த மக்கள் அங்கு கச்சான் சோளம் போன்ற உப உணவுப் பயிர்ச் செய்கையை மேற்கொண்டனர். எனினும் கடந்த வாரம் குறித்த பகுதிக்குச் சென்ற வனஇலாகாத் திணைக்களத்தினர் அந்தக் காணிகள் வனவளத்துக்குச் சொந்தமானவை என்று தெரிவித்து காணிகளை அடையாளபப்படுத்தி பெயர்ப் பலகை நட்டுள்ளனர்.
காணிகளுக்குள் அத்துமீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்களை அச்சுறுத்தியுள்ளனர். இதனால் அந்தக் காணிகளுக்குச் சென்று பயிர்ச் செய்கையில் ஈடுபடமுடியாதுள்ளது என்றும் காணிகளை மீட்டுத் தருமாறும் பாதிக்கப்பட்ட மக்கள் பலரிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்
”உள்நாட்டுப் போர் காரணமாக விவசாயம் செய்யமுடியாது இருந்தது. பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் ஊடாக காணிகளுக்கான உறுதிபடுத்தல் கோரப்பட்டது. அத்துடன் முன்னர் விவசாயம் செய்த 350 குடும்பங்களில் 270 குடும்பங்கள் வரையில் காணிக் கச்சேரி ஊடாக காணிகள் அடையாளம் காணப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டன.
அன்று முதல் 3 ஆண்டுகளாக நாங்கள் எமது காணிகளில் கச்சான் பயிரிட்டுள்ளோம். அந்தக் காணிகளில் இந்த முறை பயிர்ச் செய்கை செய்ய எண்ணினோம். எனினும் வனவளத்திணைக்களத்தினர் எமது காணிகளுக்குச் செல்ல தடைவிதித்துள்ளனர்.
சுமார் 100 ஏக்கர் காணிகளுக்கு இவ்வாறு அறிவித்தல்களை அவர்கள் வழங்கியுள்ளனர். அத்துமீறிச் சென்றால் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் எச்சரித்துள்ளனர். எமது வாழ்வாதாரக் காணிகளே அவை. அவற்றை மீட்டுத் தர அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், கரைதுறைப் பற்றுப் பிரதேச செயலர் உள்ளிட்ட வர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளோம்” என்று மக்கள் தெரிவித்தனர்.
மக்களுடைய காணிகள் தான் அவை என்று என்னால் கூறமுடியும், மக்கள் தங்களது காணிகளே அவை என்பதற்கான போமீற்களை என்னிடம் காட்டியுள்ளனர் சிலர் நாளை( இன்று தருவதாக் கூறியுள்ளனர். நான் நேரில் சென்று பார்வையிட்டேன். காணிகளில் கச்சான் பயிரிட்டதற்கான அடையாளங்கள் ஏராளம் உள்ளன.
சிறிய பற்றைகள் வளர்ந்தவுடன் அது வனவளம் என்று கூறியே வனவளத்தினர் காணிகளுக்கு எல்லையிட்டுள்ளனர். வனவளத்தினருடைய இத்தகைய செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும். முல்லைத்தீவில் அவர்களுடைய இராச்சியம்தான் நடக்கிறது. மகாவலி எல்வலையத்தில் எங்கோ உள்ளவர்களை கொண்டுவந்து இங்கு குடியமர்த்த முடிகிறது என்றால் தமிழர்களுடைய சொந்தக் காணிகளை அவர்களுக்கு கொடுப்பதில் என்ன பிரச்சினையிருக்கிற என்று எனக்குத் தெரியவில்லை .
அந்தக் காணிகளுக்குச் சென்று பார்க்குமாறு பிரதேச செயலரைக் கோரியுள்ளேன். அவர் இந்தியா சென்றிருப்பதால் வந்தவுடன் இது தொடர்பில் கதைப்பதாகத் தெரிவித்தார். தமிழ் தலைவர்கள் இந்த விடையத்தில் கூடிய கவனம் எடுத்து மக்களுக்குச் சொந்தமான காணிகள் திட்டமிட்டுப் பறிக்கப்படுவது தொடர்பில் பேசி உரிய தீர்வு காணவேணடும்.
அந்த மக்களைப் போன்று மேலும் மக்களுடைய காணிகள் அகபரிக்கப்படுவதற்கு முன்னர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.