ஜ.நா அமைதிப்படையில் உள்ள ஶ்ரீலங்கா அதிகாரி மீது போரக் குற்றச்சாட்டு; நாடு திரும்ப உத்தரவு

breaking
  மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் ஶ்ரீலங்காப் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி போர்க்குற்றம்சாட்டப்படும் ஒருவர் என்றும், அவரை உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ஐ.நா பொதுச் செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கட்டளை அதிகாரியாக செயற்படும் லெப்.கேணல் கலன பிரியங்கார லங்காமித்ர அமுனுபுரே, இறுதியுத்த சமயத்தில் மனிதஉரிமை மீறல்களில் ஈடுபட்டத தகவல் கிடைத்ததையடுத்து, அவரை திருப்பி அழைக்குமாறு ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ், கொழும்பிடம், கோரியுள்ளார் என்ற தகவலை அவர் வெளியிட்டுள்ளார். “அவரது மனித உரிமை பதிவுகள் பற்றிய அண்மைய தகவல்கள் ஆய்வு செய்யப்பட்ட பின்னர், ஐ.நா இந்த முடிவை எடுத்துள்ளது. மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்கு செல்ல முன்னர், இவரது மனித உரிமை பதிவுகள் ஐ.நாவினால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அண்மையில் புதிதாக கிடைத்த தகவல்களின் விளைவாகவே ஐ.நா இந்த முடிவை எடுத்துள்ளது. லெப்.கேணல் கலன பிரியங்கார லங்காமித்ர அமுனுபுரே தானாக நாடு திரும்பாவிடின், அவர் மிகவிரைவில் கொழும்புக்குத் திருப்பி அனுப்பப்படுவார். கூடிய விரைவில், லெப்.கேணல் அமுனுபுரேவுக்குப் பதிலான அதிகாரியை நியமிக்குமாறு இலங்கை அரசயிடம் ஐ.நா கேட்டுள்ளது.” என்றும் ஐ.நா பொதுச் செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறினார். மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில், 200 பேர் கொண்ட இலங்கை இராணுவத்தின் தெரிவுசெய்யப்பட்ட வீரர்களை கொண்ட அணி, ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றி வருகிறது. இந்த அணியின் கட்டளை அதிகாரியாக லெப்.கேணல் கலன பிரியங்கார அமுனுபுரே செயற்படுகிறார். எனினும், அவர் மீதான போர்க்குற்றச்சாட்டு தொடர்பான விவரங்கள் எதையும், ஐ.நா பேச்சாளர் வெளியிடவில்லை. மாலியில் உள்ள- பெயர் வெளியிடப்படாத- இலங்கை இராணுவ அதிகாரி ஒருவர், இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்களை இழைத்தார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக கடந்த ஜூலை மாதம் தி கார்டியன் நாளிதழ், செய்தி வெளியிட்டிருந்தது. தென்னாபிரிக்காவைத் தளமாக கொண்ட யஸ்மின் சூகாவை தலைவராக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம், ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் படையினர் தொடர்பாக அந்த அறிக்கையில் தகவல்களை வெளியிட்டிருந்தது. போர்க்குற்றச்சாட்டைக் காரணம்காட்டி இராணுவ அதிகாரியை திருப்பி அனுப்ப ஐ.நா எடுத்துள்ள முடிவு குறித்து கொழும்பு இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருவது குறிப்பிடத்தக்கது.