தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு அடுத்த தீபாவளிக்கிடையில் கௌரவமான தீர்வு எட்டப்படவேண்டும் எனவும் அதற்கு எங்கள் எல்லோருக்கும் இறைவன் நல்ல புத்தியை வழங்கவேண்டுமெனவும் ஶ்ரீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்காவின் ஜனாதிபதி மாளிகையில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறும் கலந்து கொண்டு வருகின்றேன்.
ஒவ்வொரு வருடமும் அடுத்த தீபாவளிக்கிடையில் தமிழ் மக்களுக்கான தீர்வு வேண்டுமென வலியுறுத்தி வருகின்றேன். இம்முறையும் அதனையே உரத்து வலியுறுத்த விரும்புகின்றேன்.
கடந்த காலங்களில் எத்தனையோ சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டிருக்கின்றன. அதேபோன்று தற்போதைய சந்தர்ப்பத்தினை மைத்திரிபால சிறிசேன தவற விடக்கூடாதென கேட்டுக் கொள்கின்றேன்.
அவருக்கொரு தார்மீகக் கடமையொன்று இருக்கின்றது. ஏனெனில் அவரை ஜனாதிபதி ஆக்கியதில் தமிழ் மக்களது பங்களிப்பு இருக்கின்றதை அவர் மறந்திருக்க மாட்டார்.
தற்போது மாறியிருக்கின்ற அரசியல் சூழல் தொடர்பில் தமிழ் மக்கள் குழப்பமடைந்துள்ளனர். இதனால் ஜனாதிபதியின் காத்திரமான செயற்பாடுகளை தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்’ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.