தாயகத்தின் வடக்கே யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையில் நேற்று 06.11.18 4 கிலோ 200 கிராம் கஞ்சாவுடன் ஒருவரை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
உந்துருளியில்கடத்திச் செல்லப்பட்டபோதே கஞ்சா கைப்பற்றப்பட்டது என்று காங்கேசன்துறைக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
காங்கேசன்துறை சிறப்புக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாருக்கு கஞ்சா கடத்தப்படுவது தொடர்பில் இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
அதையடுத்து பருத்தித்துறை குடத்தனை பொற்பதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
அந்தப் பகுதியில் பயணித்த உந்துருளி மடக்கிச் சோதனையிடப்பட்டது. பொதி செய்யப்பட்ட நிலையில் அதிலிருந்து 4 கிலோ 200 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. உந்துருளியைச் செலுத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் பருத்தித்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். உந்துருளியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கஞ்சா விற்பனைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது