ஆளுநரின் வினைத்திறன் செயற்பாடு:மாணவர்கள் வந்தபின் பாடசாலைகளை மூடச் சொன்னார்

breaking
  வடக்கு பாடசாலைகளிற்கு மாணவர்கள் சென்றதன் பின்னர், பாடசாலைகளிற்கு விடுமுறை அறிவித்தலை வெளியிட்டுள்ளார் ஶ்ரீலங்கா அரசின் வடக்கு ஆளுனர் ரெஜினோல்ட் குரே. கஜா புயலின் தாக்கல் மற்றும் மழை காரணமாக இந்த விடுமுறை அறிவித்தலை ஆளுனர் அறிவித்துள்ளார். தற்போது பரீட்சைகள் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் அவற்றை இடைநிறுத்தும்படி மாகாண கல்விப்பணிப்பாளரால் அதிகாரிகளிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்றைய பரீட்சையை இன்னொரு தினத்தில் நடத்தும்படி அறிவுறுத்தியுள்ளார். பரீட்சைக்காக மாணவர்கள் இன்று பாடசாலைக்கு சென்றதன் பின்னரே, ஆளுனரின் தாமத அறிவித்தல் வெளியாகியுள்ளது. அண்மையில் தீபாவளிக்கு முந்தையை விடுமுறையையும் ஆளுனர் மிக தாமதமாகவே வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வடமாகாணசபையின் பதவிக்காலம் முடிவடைந்ததும், கல்வியமைச்சிற்கு சென்ற ஆளுனர், அதிகாரிகளை அழைத்து வினைத்திறனாக செயற்பட தயாராகுமாறு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.