அரச ஊடகங்களால் இலங்கை சபாநாயகர் கவலை.?

breaking
இலங்கை அரச ஊடகங்கள் பக்கச்சார்பான விதத்தில் செயற்படுவது தொடர்பில் கவலை தெரிவித்து சபாநாயகர் கரு ஜயசூரிய ஊடக அமைச்சின் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அரச ஊடகங்கள் பக்கச்சார்பான முறையில் செயற்படுகின்றன என நாடாளுமன்றத்தில் கரிசனை வெளியிடப்பட்டதை தொடர்ந்தே சபாநாயகர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபனத்தின் தலைவர் சோமாரட்ண திசநாயக்க ஊடக அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். நாடாளுமன்ற அமர்வுகளை நேரடி ஒலிபரப்பு செய்வது ஏன் இடைநிறுத்தப்பட்டது என்பதை அறிவதற்காகவே சபாநாயகர் இரு அதிகாரிகளையும் அழைத்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாடு நெருக்கடியான சூழலில் உள்ள நிலையில் ஊடக நிறுவனங்கள் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டியதன் அவசியத்தை சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், ஐடிஎன் மற்றும் ஏ.என்.சில் பத்திரிகைகள் போன்றவற்றின் நடவடிக்கைகள் நாடாளுமன்றத்திற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். இதேவேளை சபாநாயகரின் முறைப்பாடு குறித்து உடனடியாக அரச நிறுவனங்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக ஊடக அமைச்சின் செயலாளர் தெரிவித்ததாகவும் அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.