இந்தியா நாட்டின் ஒற்றுமையில் மத்திய அரசிற்கு அதிக அக்கறை உள்ளதால் அதை பற்றி வைகோ கவலைப்பட வேண்டாம் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்வதாக வைகோ கூறியுள்ளதற்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். நதிநீர் பங்கீடு பிரச்சினையில் எந்த மாநிலமும் வஞ்சிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு மிக கவனமாக உள்ளதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.
எனவே பிரிவினையை பேசி அரசியல் செய்ய முற்பட வேண்டாம் என்று வைகோவை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழக அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் மத்திய அரசு உறுதுணையாக இருந்து வருவதாக தமிழிசை கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி வலுவான கூட்டணியை அமைத்து எதிர்வரும் தேர்தல்களை எதிர்கொள்ளும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.