வடதமிழீழ கிளிநொச்சி இரணைமடுக் குளத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் காலத்தில் திறந்து வைக்கப்பட்ட நினைவுக் கல்லை நேற்றுமுன் தினம் மாலை பெக்கோ இயந்திரத்தின் ஊடாக இடித்தகற்றி விட்டு, மைத்திரிபால சிறிசேனவின் புதிய நினைவுக் கல் அமைக்கப்பட்டு அது நேற்றுதிறந்து வைக்கப்பட்டுள்ளது.
1956ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் இரணைமடுக் குளம் திறந்து வைக்கப்பட்டது. அப்போதைய தலைமை அமைச்சராக இருந்த டட்லி சேனநாயக்கவின் காலத்தில் திறந்து வைக்கப்பட்டமையைக் குறிக்கும் வகையில் நினைவுக் கல் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நினைவுக் கல் நேற்று முன்தினம் மாலை பெக்கோ இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் பெயரை மாத்திரம் உள்ளடக்கிய புதிய நினைவுக் கல் பொருத்தப்பட்டு அது நேற்றுத் திறந்து வைக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து கூட்டு அரசு அமைத்திருந்தன. கடந்த ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதி, கூட்டு அரசிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெளியேறியது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தலைமை அமைச்சர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவையும் நீக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.