சிவன் கோவிலில் திருடர்கள் கைவரிசை: உண்டியலும் உடைப்பு

breaking
  வடதமிழீழம், வவுனியா, கேவில்குளம் சிவன் கோவில் மற்றும் விடுதி ஆகியவற்றில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று காலை ஆலயத்திற்கு சென்ற போது இரவு திருட்டுக்கள் இடம்பெற்றமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஆலய நிர்வாகத்தால் வவுனியா காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கோவில் குளம் சிவன் கோயில் வெளி வீதியில் உள்ள பிள்ளையார் விக்கிரகத்தின் முன்னாள் இருந்த உண்டியல் திருடப்பட்டுள்ளது. அத்துடன், ஆலயத்திற்குள் நுழைந்த திருடர்கள் ஆலய உள் வீதியில் காணப்பட்ட உண்டியல் ஒன்றினையும் திருடிச் சென்றுள்ளனர். திருடப்பட்ட இரண்டு உண்டியல்களும் ஆலய கேணிக்கருக்கில் உடைக்கப்பட்ட நிலையில் வெறுமையாக மீட்கப்பட்டது. அத்துடன் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள விடுதிக்குள்ளும் கூரை வழியாக நுழைந்த திருடர்கள் விடுதியில் இருந்த புதிய ஆடைகள் உள்ளிட்ட சில பெறுமதியான பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர். குறித்த இரு உண்டியல்களும் கடந்த 6 மாதமாக திறந்து பணம் எடுக்கப்படாமல் இருந்தமையால் அவற்றில் இலட்சக் கணக்கில் பணம் இருந்திருக்கலாம் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். ஆலய கேணிக்கு அருகில் உடைக்கப்பட்ட உண்டியல்கள், உண்டியல் உடைக்கப் பயன்படுத்தப்பட்ட கம்பிகள், திருடப்பட்ட ஆடைகள் சில காவல்துறையினரால் மீட்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான விசாரணைகளை வவுனியா காவல்துறை மேற்கொண்டு வருகிறார்கள்.