பாதுகாப்பற்ற முறையில் கழிவகற்றலை மேற்கொள்ளும் சுகாதார சிற்றூளியர்கள்

breaking
    அம்பாறை மாவட்டத்தில் முக்கியமாக கல்முனை மாநகர சபை உள்ளது.அதில் பணியாற்றும் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் சுகாதார ஊழியர்கள் எவ்வித பாதுகாப்பும் இன்றி குப்பை கூழங்களை அகற்றும் பணியில் தினமும் ஈடுபடுகின்றனர். குறிப்பாக வீதியோரங்களில் தினமும் சேரும் குப்பை கூழங்களை அகற்றுவதற்காக செல்லும் இவர்கள் எவ்வித பாதுகாப்பு அங்கிகளையும் அகற்றாது குறித்த பணியில் ஈடுபடுவதை காண முடிகின்றது. கல்முனை மாநகரத்தில் இவ்வாறான வசதி வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க முடியாது போனால் காலப்போக்கில் இப்பணியில் ஈடுபடுபவர்கள் நோய் தாக்கத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் . இவர்கள் கழிவு நீர்த் தொட்டிகளில் பாதாள சாக்கடை கால்வாயில் ஏற்படும் அடைப்புகளை சுத்தம் செய்யக் கூடிய வகையில் எதுவித பாதுகாப்பு அங்கிளும் அவர்கள் வசம் எதுவும் இல்லை என்பதே மேற்குறித்த படங்கள் காட்டுகின்றன. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமல் தொழில் செய்தல் கூடாது என்பது விதி. அதனை மீறி தொழில் செய்தால் தண்டனை வழங்கப்படுவது நடைமுறையாகும். ஓர் துப்புரவுத் தொழிலாளி தான் பணிசெய்யும் இடத்தில் உரிய கையுறை காலுறை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி பணிபுரிந்தால் அதனைக் கண்காணித்து உரிய அறிவுரை வழங்க நடவடிக்கை எடுக்க சரியான அக்கறை காட்டப்படுவதில்லை. உரிய பாதுகாப்பின்றி கழிவுகளோடும் குப்பைகளோடும் பணிபுரியும் இவர்கள் விரைவிலேயே பல நோய்களின் தாக்குதலுக்குள்ளாகி உடல்நலம் பாதிக்கப்பட்டு மற்றவர்களுக்கும் நோய்த்தொற்றைப்பரப்பிவிட்டு விரைவில் தன் வாழ்வைத் தொலைந்து விடுகின்றனர். துப்புரவுத் தொழிலில் ஈடுபடும் பலர் சகிக்க முடியாத துர்நாற்றம் மற்றும் இதர காரணங்களைக்காட்டி மதுவிற்கு அடிமையாவது சர்வசாதாரணமாகிவிட்டது. மதுவின் மயக்கத்தில் இருக்கும்பொழுது ஆபத்து நேரங்களில் எப்படித்தப்பிப்பது என்னும் அடிப்படை அறிவும் மங்கிப்போகும் என்பதையும் பணிநேரத்தில் மது அருந்திவிட்டுப் பணிசெய்தல் கூடாது என்பதையும் எடுத்துக்கூறுவதோடு அவற்றை அமுல்படுத்த வேண்டும்.   கழிவகற்றல் வாகனத்தையோ, கழிவுகள் இருக்கும் இடங்களையோ, வடிகான்களையோ கடந்து செல்லவே மூக்கைப்பிடித்துக்கொண்டு செல்கிறோம். வாழ்நாள் முழுதும் இப்பணிகளிலேயே அடிப்படை வசதியின்றி இப்பணி (துப்பரவு) செய்கின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் நாம் அனைவரும் கைகொடுப்பது கடமையாகும். துப்புரவுத் தொழிலாளர்கள் தாம். பணிசெய்யும் இடங்களில் பெரும்பாலும் பாதுகாப்பு இல்லாமலேயே பணிபுரிந்து வருகின்றனர்.இவ்வாறு துப்புரவுத் தொழிலாளர்கள் தாம் பணிசெய்யும் பொழுது தமக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க உரிய வகையில் பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்திக் கொள்ளாமல் இருப்பதற்குக் காரணம் நோய்த்தொற்று ஏற்படுவது குறித்த அறியாமையாக இருக்கலாம் அல்லது பாதுகாப்புக் கவசங்களை அணிந்துகொண்டு பணிசெய்வது சிரமம் என நினைக்கலாம்அல்லது நிர்வாகம் உரிய உபகரணங்களை வாங்கித் தராமல் இருக்கலாம்.