வீதியோரங்களில் வீசப்படும் கழிவுகளால் மக்கள் அசௌகரியம்

breaking
  வடதமிழீழம், வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் வீதியோரத்தில் வீசப்படும் கழிவுகளால் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வவுனியா – ஈச்சங்குளம் வீதியில் தாண்டிக்குளம் பகுதியிலுள்ள நீர் பாயும் கால்வாய் மற்றும் வீதியோரங்களில் கழிவுகள் வீசப்பட்டு வருகின்றன. வீட்டு கழிவுகள், கடை கழிவுகள், கோழி இறைச்சி கடை கழிவுகள் என அப் பகுதியில் வீசப்படுவதால் அப்பகுதி துர்நாற்றம் வீசுவதுடன், அவ் வீதியால் பயணிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. அங்கு வீசப்படும் கழிவுகள் ஓடும் நீரினாலும், நாய் மற்றும் காகம் போன்றவற்றினாலும் காவிச் செல்லப்படுவதனால் அயலில் உள்ள வீடுகளிலும் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சூழல் மற்றும் நீர் என்பன கழிவுகளால் மாசடைந்து வருவதுடன், தொற்றுநோய் பரவக்கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து வவுனியா நகரசபை கவனம் செலுத்தி கழிவு முகாமைத்துவத்தை மேற்கொண்டு தம்மை நிம்மதியாக வாழ வழியை ஏற்படுத்தவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.