இந்து மாணவர்கள் தமது மத, கலாசார சூழலில் கல்வி கற்கும் நோக்குடன் உருவாக்கபட்ட அநுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகாவித்தியாலயம் முஸ்லிம் பாடசாலையாக மாற்றும் நீண்டகாலத் திட்டத்தை தடுத்து நிறுத்துமாறு அநுராதபுரம் விவேகானந்தா சபையின் தலைவரும் பாடசாலையின் முன்னாள் அபிவிருத்திச் சங்கச் செயலருமான வி.ஞானசந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
1985ஆம் ஆண்டு வரை சிறப்பாகச் செயற்பட்ட பாடசாலை, 1985ஆம் ஆண்டு இடப்பெயர்வால் மூடப்பட்டது. முஸ்லிம் அதிபர், ஆசிரியர் குழாத்துடன் பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்டது. இந்து தமிழ் மாணவர்களின் நலன்காக்க யாருமற்ற நிலையில் சிறிது, சிறிதாக பாடசாலை நிர்வாகத்தால் எமது மாணவர்களுக்கு அநீதிகள் இழைக்கப்பட்டது. இந்துக்கள் பலர் மதமாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டனர்.
பாடசாலையின் நிர்வாகம் வரலாறுகளை அழித்து, சபை மற்றும் கதிரேசன் ஆலயத்துடனான தொடர்புகளைத் துண்டித்து முஸ்லிம் பாடசாலையாக மாற்றும் நோக்குடன் செயற்பட்டு வருகின்றது. எமது சபை, கதிரேசன் ஆலயம், விவேகானந்தா வித்தியாலம் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டிலேயே அமைந்துள்ளன.
தற்போதைய நிர்வாகம் வரலாறு தெரியாத இந்து தமிழ்ப் பெற்றோர்களை மூளைச் சலவை செய்து விவேகானந்தா சபை மற்றும் ஆலயத்துடனான தொடர்புகளைத் துண்டித்து வருகிறது.
இந்து மாணவர்களுக்கும் விவேகானந்தா சபைக்கும் அநீதி ஏற்படும் போது பிக்குகள், சிங்கள அறிஞர்கள், அரசியல்வாதிகள் எமக்கு உதவிவருகின்றனர்.
தற்போதுவரை இந்துமத விடுமுறை நாள்களில் பாடசாலை நடாத்தபடுகின்றது. வீபூதி பூசுவதற்கு அனுமதிமறுக்கபடுகின்றது. இந்துசமய வழிபாடுகளுக்குத் தடைவிதிக்கபடுவதுடன், இந்துசமயம் கற்பிப்பதற்கு வகுப்பறை கொடுக்காமல் மரங்களின் கீழேயே நடைபெற்றுவருகிறது.
விவேகானந்தன் என்ற பெயரில் இருந்த சஞ்சிகையின் பெயர் விவேகி என்று மாற்றபட்டது. விவேகானந்தரின் படம் அகற்றபட்டது. இந்து மாணவர்கள் பர்தா அணிவிக்கபட்டார்கள். சிவராத்திரி தினத்தில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. பாடசாலையில் கற்பிக்கும் 11 தமிழ் ஆசிரியர்களும் கதிரேசன் ஆலயத்துக்கு வருவதில்லை. அவர்களுக்கு தடைவிதிக்கபடுவதாக உணர்கின்றோம். இது அநீதியான செயற்பாடு.
தற்போது எமது முயற்சியின் விளைவாக வவுனியாவிலிருந்து இந்து அதிபரை பாடசாலைக்கு நியமித்தோம். எனினும் அவரைப் பிரதி அதிபராகவே மாகாணக் கல்விபணிப்பாளர் அங்கு நியமித்துள்ளார். எமது பிரச்சினைகளை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் -– என்றார்.