வடதமிழீழம், முல்லைத்தீவு மாவட்டத்தின் மூத்த கலைஞர்களின் ஒருவரான கணேஸ் என்று அழைக்கப்படும் நல்லையா கணேசலிங்கம் நேற்று மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு மண்ணின் மூத்தகலைஞர்களில் ஒருவரான இவர் சிறந்த நாட்டுக்கூத்து கலைஞனாக, பண்டாரவன்னியன்,கோவலன் கண்ணகை கூத்துக்களில் சிறந்த நடிகனாக திகழ்ந்து, 2009 ஆம் ஆண்டு தனது ஒரு காலினை இழந்த நிலையிலும் கலைக்காக தன்னை அர்ப்பணித்திருந்தார்.
இவரின் இறுதி வணக்க நிகழ்வு புளியங்குளம் ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் கலைத்தாய் நாடகமன்றத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.
கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன், முன்னாள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம், அண்ணாவியார்களான என்.எஸ்.மணியம், பாலேந்திரம், புளியங்குளம் அ.த.க.பாடசாலை அதிபர் மற்றும் முத்துஜயன் கட்டு வலதுகரை அ.த.க.பாடசாலை அதிபர் ச.நகேந்திரராசா ஆகியோர் நினைவுரைகளை நிகழ்த்தினர்.