இரண்டாவது நாளாக மக்கள் போராட்டம்: தாகத்திற்கு தண்ணீர் வழங்க மறுத்த ஶ்ரீலங்கா இராணுவம்

breaking
வடதமிழீழம்,முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, கேப்பாப்புலவு படைமுகாம் வாயிலில் ஆரம்பிக்கப்பட்ட முற்றுபை் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. காணி விடுவிப்பை வலியுறுத்தில தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கேப்பாப்புலவு மக்கள், நேற்றிலிருந்து படைமுகாம் வாயிலில் முற்றுகைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.   அதன்படி இந்த முற்றுகைப் போராட்டம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்கின்றது. இராணுவ முகாமுக்கு முன்பாக, பெண்களும் குழந்தைகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தோடு இப்போராட்டத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த பொதுமக்களும், அருட்சகோதரிகளும் பொது அமைப்புக்களும் கலந்துகொண்டுள்ளனர். கேப்பாப்புலவில் உள்ள தங்களது காணிகளை விடுவித்துத் தருமாறு வலியுறுத்தி கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், கேப்பாப்புலவு பிரதேசத்தில் வசித்த 84 குடும்பங்களினால் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த விடயம் தொடர்பாக ஶ்ரீலங்கா ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு, ஒரு மாதகால அவகாசம் வழங்குமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் வாக்குறுதி வழங்கப்பட்டது. எனினும், வழங்கப்பட்ட வாக்குறுதிக்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளதையடுத்து, படைமுகாம் வாயிலில் மக்கள் தமது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். அண்மையில் முல்லைத்தீவு விஜயம் செய்த மைத்திரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கண்டும் காணாதது போல உதாசீனம் செய்து சென்றிருந்தார். நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தாகத்தில் தவித்த போதும் அவர்கள் தங்களிடம் இருக்கும் நீரை எடுக்கவிடாது இராணுவம் தடுத்திருந்தது இதே வேளை முன்னைய நாட்களில் இராணுவம் மக்களுக்கு பொருட்களை வழங்கி புகைப்படம் எடுத்து பிரச்சாரங்களை செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.