"கல்லறைக்குள் கதிரவன் "மேஜர் பிரசாத்.!
பிரசாத்..!
விடுதலைப் பாதையில்
உன்னால்
வளர்த்தெடுக்கப்பட்ட
சின்னச் சின்னப் பிரசாத்துக்கள்
விடியலை நோக்கிய
வண்ணத்துப் பூச்சிகளாய்,
தேசத்திற்கு விளக்கேற்ற
தீட்டப்படும்
தீக் கற்களாய் ...
பல தடவைகளை
மரணம் உன்னோடு
மல்லுக்கட்டி
வெல்ல முடியவில்லையே என்று,
வேதனைப் பட்டது .
இருபக்க வீதியிலும்
இந்தியப்படை காத்திருக்க
பீதியடைந்த மக்கள்
வீதிகளை மறந்தோட.
நீயோ .....
அடிபாட்டுக்குத் தேவையான
ஆயுதங்களைச் சுமநது
சந்திகளையும் முடக்குகளையும்
சாதாரணமாய்க் கடந்து வந்தாய்.
ஒற்றையடிப் பாதையிலும்
ஓவென்ற தெருக்களிலும்
விடுதலை தேடி
விரைந்த உடன் சுவடுகள்.....
ஒருநாள்
உன்போன்றோரின்
இறப்புக்களின் பின்னணியில்
இந்தியப்படை வெளியேறியது.
சாவுகளின் மேட்டில் ஒரு
சரித்திரம் உருவாகும்.
வீரனே
உன்
கல்லறையில் விளக்கேற்றி
களங்கப் படுத்தவில்லை .....
கண்ணீர் வடிக்கவில்லை
ஏனென்றால்......
எமக்குத் தெரியும்,
உள்ளே இருப்பது
சூரியன் என்று .
குறிப்பு :
மேஜர் பிரசாத் (கந்தையா முரளிதரன், அஜந்தா இல்லம், மூளாய்,பிறப்பு 18.09.1962 பனிப்புலம் என்னுமிடத்தில் இந்தியப்படை கைதுசெய்ய முற்படுகையில்ச சயனைற் உட்கொண்டு வீரச்சாவடைந்தார் (06.02.1988). இவர் லெப்.கேணல் திலீபனிற்குப் பின்னர் யாழ். மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்தவர் .
கவியாக்கம் : கப்டன் கஸ்துாரி
வெளியீடு:எரிமலை இதழ் (2000)