நாளை வெளியாகிறது மன்னார் புதைகுழி எலும்புக்கூடுகளின் பரிசோதனை அறிக்கை!

breaking
மன்னார் மனிதப்புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவில் காபன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் குறித்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை நாளை வெள்ளிக்கிழமை வெளிவரும் என அகழ்வுப்பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மன்னார் மனித புதைகுழியில் அகழ்வுப்பணிகள் நேற்று 139 வது நாளாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத்தெரிவித்தார். ”குறித்த வளாகத்திலிருந்து 312 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவற்றில் 297 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 26 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் ஆய்வு அறிக்கை நாளை வெள்ளிக்கிழமை 08ம் திகதி வெளிவரும்” என அவர் தெரிவித்தார். மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தெரிவுசெய்யப்பட்டு கடந்த 24ம் திகதி அமெரிக்காவிற்கு எடுத்துச்செல்லப்பட்டு புளோரிடாவில் உள்ள ஆய்வு கூடத்தில் காபன் பரிசோதனைக்காக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.