யானைகளின் அட்டகாசத்தால், வாழிடங்களை விட்டு வெளியேறும் அபாயத்தில் மக்கள்.
காட்டு யானைகளின் அட்டகாசத்தால்,
வாழிடங்களை விட்டு வெளியேறும் அபாயத்தில்மக்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில், விசுவமடுப் பகுதியில் தொட்டியடிக் கமக்கார அமைப்பின் பகுதிகளான, டி-3 மற்றும் மேட்டுப்பிட்டி உள்ளிட்ட பல பகுதிகளுக்குள் காட்டுயானைகள் இரவில் புகுந்து அட்டகாசம் செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தாம் வாழிடங்களைவிட்டு வெளியேறவேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்பில் தொட்டியடிக் கமக்கார அமைப்பின் பிரதிநிதிகளில் ஒருவரான க.குலசிங்கம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், டி-3, தொட்டியடிப் பகுதியில் இரவு 07.00 மணி தொடக்கம் யானையின் அட்டகாசததால் மக்கள் குடிபெயரும் நிலையில் இருக்கின்றார்கள்
நாங்கள் வருடாவருடம் தோட்டங்கள் மற்றும் வயல் செய்து, தென்னைகள் வைத்து தொடர்ச்சியாக யானைகள் அழித்துச் செல்கின்றன. இதை விட யானைகள் இங்குள்ளவர்களை தாக்க முற்பட்ட சம்பவங்களும் உள்ளன.
இதனால் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்ததன் விளைவாக உரிய திணைக்களின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டது. அந்தவகையில் இரண்டு மாதங்களுக்கு முன்பதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் வந்து எமது பகுதிகள் பார்வையிடப்பட்டு, வேலி அமைப்பதற்குரிய அடையாளப்படுத்தல்களை மேற்கொண்டுவிட்டுச் சென்றார்கள்.
வேலிஅமைத்துத் தருவதாகவும் கூறினார்கள், ஆனாலும் இன்னும் வேலி அமைக்கும் பணிகளில் முன்னேற்றம் எதுவும் இருப்பதாக எமக்குத் தெரியவில்லை.
யானைகளுடைய அட்டகாசமானது தாங்கமுடியாமல் இருக்கின்றது. இதனால் இப்பகுதியில் வசிக்கின்ற குடும்பங்கள் ஒவ்வொருத்தராக வாழிடங்களிலிருந்து வெளியேறவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
விசுவமடு, தொட்டியடிப் பகுதி இது தவிர டி3, என்று சொல்லக்கூடிய பகுதி, மேட்டுப்பிட்டி என்று என்று சொல்லப்படும் பகுதிகளில் 700ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளில் விவசாயிகள் தமது பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
தமது வாழ்வாதாரமானது பயிர்ச்செயகையை மாத்தாரமே நம்பியிருப்பதாகவும், எனவே யானைகளால் பாதிப்புகள் ஏற்படாதவாறு தாம் பயிர்செய்கைகளை மேற்கொள்ள தமக்கு வசதிகள் உடனடியாகச் செய்துதரப்படவேண்டுமென அவர்கள் கேட்கின்றனர்.
வன ஜீவராசிகள் திணைக்களம் தன்னுடைய வேலைகளைச் செய்யவேண்டும். அவர்கள் இவ்வாறு தமது பணிகளைச் செய்யாமலிருப்பது இந்த மக்களையும், அவர்களது பயிர்ச்செய்கைகளையும் பலி எடுக்கவா என்ற கேள்வி எழுகின்றது.
பல தென்னைகள் யானைகளால் வீழ்த்தப்பட்டுள்ளது. விவசாயிகள் தாம் விவசாயம் செய்யமுடியவில்லையே என்ற ஏக்கத்தோடு இருக்கின்றார்கள். இந்தவகையில் நிச்சயமாக இந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் பல தொழில்களில் விவசாயம் முக்கியமானது. விவசாயிகளுடைய இந்த கோரிக்கைக்குச் செவிசாய்த்து, இந்த யானைவேலியை அமைத்து இந்த மக்களுடைய துன்பத்தைத் தீர்க்கவேண்டும்.