சொந்த நிலங்களை துப்பரவு செய்ய தடைபோடும் வனவளப்பாதுகாப்பு திணைக்களம்

breaking

இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமது சொந்த நிலங்களை துப்பரவு செய்ய தடைபோடும்  வனவளப்பாதுகாப்பு  திணைக்களம் சிங்களக்  குடியேற்றங்களுக்கு  காடுகள் அழிக்கப்படும் செயற்பாடுகளுக்கு பூரண அனுசரணை வழங்குகின்றது  என தமிழர்  மரபுரிமைப் பேரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழர் தாயக பகுதியில் தொடரும் திட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்பில் தமிழர் மரபுரிமைப் பேரவையினர் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் அந்த அறிக்கையிலேயே  இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

காலம் காலமாக வடகிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கோடு பல சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதுடன் தமிழர்களின் மரபுரிமையை சிதைக்கும் நோக்குடன் திட்டமிட்ட பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளும் மத்திய அரச நிறுவனங்களின் பூரண அனுசரணையுடன் இடம்பெற்று வருவதும் இச்செயற்பாடுகளுக்கெதிராக தமிழ்மக்கள் போராடுவதும் வளமையான நிகழ்வுகளாகிப் போய்விட்டன.

வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் ஊற்றுக்குளம் கிராமத்தின் அடர்ந்த காட்டுப்பகுதியில் அவசர அவசரமாக புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டு அதனைச் சூழவுள்ள பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றமொன்று நிறுவப்படுவதற்கான பூர்வபங்க வேலைகள் இடம்பெற்று வருகின்றது. மத்திய அரசின் கமநல சேவைத் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், வனவளப்பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்கள் இத்திட்டத்திற்கு பூரண அனுசரணை வழங்கி வருகின்றன. வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த இப்பிரதேசத்தில் அனுராதபுர மாவட்ட கமத்தொழில் திணைக்களம் வேலைத்திட்டங்களை மேற்கொள்வது இச்செயற்பாட்டின் கபட நோக்கத்தினை வெளிக்காட்டுகின்றது.

 

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் காரணமாக இப்பிரதேச மக்கள் அரசியல்,பொருளாதார ரீதியில் பலவீனப்படுத்தப்பட்டுள்ளனர்

இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமது சொந்த நிலங்களை துப்பரவு செய்ய தடைபோடும் வனவளப்பாதுகாப்பு திணைக்களம் சிங்களக் குடியேற்றங்களுக்கு காடுகள் அழிக்கப்படும் செயற்பாடுகளுக்கு பூரண அனுசரணை வழங்குகின்றது. ஊர்காவற் படையினர் பாதுகாப்பு வழங்க பௌத்த துறவிகள் சிங்களக் குடியேற்றத்தினை வலுப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

இச்செயற்பாடுகள் மத்திய அரசின் பூரண அனுசரணையுடன் நன்கு திட்டமிடப்பட்;ட முறையிலே மேற்கொள்ளப்படுகின்றன. மத்தியில் ஜனநாயகத்தைப் பாதுகாத்து விட்டதாக தம்பட்டமடிக்கும் தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்களின் மரபுரிமை அடையாளங்களை அழிக்கும் நோக்கோடு மேற்கொள்ளப்படும் இத்தகைய திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளை தடுக்க அரசுக்கு காத்திரமான அழுத்தத்தினை வழங்கவில்லை.

இக்குடியேற்ற திட்டத்துக்கான  பூர்வாங்க நடவடிக்கைகள் கடந்த சில காலங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டிருந்தன அனுராதபுரம் கமத்தொளில் திணைக்களத்தினூடாக இப்பகுதியில் இருந்த கச்சல் சம்மளமகுளம் பிரமாண்டமாக புனரமைகப்பட்டபோது இப்பகுதியில் குடியேற்றம் ஒன்று நடைபெறப்போவதை உணர்ந்து தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறப்பினர்களிற்ககும் நேரடியாக தெரியப்படுத்தி இருந்தும் இவ் விடயம் கண்டுக்கொள்ளப்படவில்லை என்பது வேதனைக்குரியது. மாறாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள் கடந்த நான்கு வருடங்களாக இவ் எல்லா ஆக்கிரமிப்பு திட்டங்களையும் உள்ளடக்கியதான வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவளித்ததன் ஊடாக இதனை ஏற்று இதற்குத் துணை போய்விட்டார்கள்.

உண்மையிலேயே தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பலத்தோடு ஆட்சியைத் தக்க வைத்துள்ள அரசின் தமிழர் விரோத செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெறுகின்ற போது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்  தட்டிக்கேட்டு தடுத்து நிறுத்த முடியாது தடுமாறுவது தமிழினத்தின் சாபக்கேடு.

 

இன நல்லிணக்கத்தை மிக மோசமாகப் பாதிக்கும் பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளையும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் தடுத்து நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்டவர்களை வினையமாகக் கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது