அரசியல் கைதியொருவர் பிணையில் விடுவிப்பு!

breaking
கடந்த 4 ஆண்டுகளாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த குடும்ப பெண் ஒருவரை கெப்பரிக்கொல்லாவ நீதவான் நீதிமன்றம் காசுப் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குறித்த குடும்பப் பெண் சார்பாக மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு இவ் வழக்குக்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வந்தது. முல்லைத்தீவு விஸ்வமடுவைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான ரவீந்திரன் மதனி (வயது-31) என்ற இளம் குடும்பப்பெண் கடந்த 2014 ஆம் ஆண்டு  மார்ச் மாதம் 10 ஆம் திகதி பயங்கரவாத விசாரனை பிரிவினரால் கைது செய்யப்பட்டு வெலிமடை பொலிஸாரால் பதவிய சுற்றுலா நீதவான் நீதிமன்றில் குறித்த குடும்ப பெண்னுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன. இவருக்கு எதிராக  தண்டணை கோவை சட்டத்தின் கீழ் 443, 369, 394 ஆகிய சட்டத்தின் கீழ் இவ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதோடு, கண்ணிவெடி அகற்றும் பொருட்களை கையாண்டுள்ளமை தொடர்பாகவும் இவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்குகளுக்கான தீர்ப்பு இன்று வியாழக்கிழமை (07) கெப்பரிக்கொல்லாவ நீதவான் நீதிமன்றில் வழங்கப்படும் என எதிர்பார்த்த போதும் இவ் வழக்கை விசாரித்து வந்த நீதவான் ரி.ஜே.பிரபாகரன் இடம்மாற்றம் பெற்றுள்ளமையால் இவ் வழக்குக்கான கோவையை தீர்ப்புக்காக அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இருந்தும் இவ் அரசியல்கைதி இன்று கெப்பரிக்கொல்லாவ நீதவான் நீதிமன்றில் சிறைச்சாலை அதிகாரிகளால் ஆஐர்படுத்தப்பட்டார். இதன்போது, சந்தேக நபர் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி வீ.எஸ்.நிரஞ்சன் ஆஜராகி இருந்ததுடன் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் குழுவினரும் இவ் அரசியல் கைதியின் நலன் நோக்கி மன்றில் சமூகமளித்திருந்தனர். இதன் போது குறித்த அரசியல் கைதியான பெண்ணை  25 ஆயிரம் ரூபாய்  காசுப் பிணையில் செல்ல   நீதவான் கட்டளைப் பிறப்பித்திருந்தார். குறித்த வழக்கு தீர்ப்புக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.