நீதிமன்றத்துக்கு நேர்த்தியாக ஆடை அணியாமல், தலைமுடி வெட்டாமல் ஒழுக்கம் பேணாது வருவோர்களாயின், அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் தெரிவித்துள்ளார்.
வடதமிழீழம்: யாழ்ப்பாணம் நல்லூர், முடமாவடியில் வீடுகளை அடித்து உடைத்தமை, வாள்வெட்டில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்கு யாழ்ப்பாண நீதிவான் மன்றில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மன்றில் முற்பட்ட சந்தேக நபர்கள் நேர்த்தியாக ஆடைகள் அணியாது, தலை முடி வெட்டாது காணப்பட்டனர். அவர்களை அவதானித்த நீதிவான் நீதிமன்றுக்கு சமூகம் அளிக்கும் போது ஒழுக்க விழுமியங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். இனிமேல் வழக்குக்காக நீதிமன்றுக்கு வரும்போது நேர்த்தியாக ஆடைகள் அணிந்து வரவேண்டும். நாகரிகமான முறையில் தலை முடி வெட்டியிருத்தல் வேண்டும். ஒழுக்கமற்ற முறையில் வந்தால் சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள்த எனவும் எச்சரிக்கை விடுத்தார்.