கல்லடி பாலத்திலிருந்து தற்கொலைகளை தடுக்க முதல்வரின் திட்டங்கள் ஏகமனதாக ஏற்பு

breaking
  தென்தமிழீழம், மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்ற தற்கொலைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் சில திட்டங்களை மட்டக்களப்பு மாநகரசபை நடைமுறைப்படுத்தவுள்ளது. நேற்றைய சபை அமர்வில் அந்த திட்டங்கள், ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபையின் 15ஆவது பொது அமர்வு நேற்று (07) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. நேற்றைய அமர்வின்போது, மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் இருக்கும் கல்லடிப் பாலத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற தற்கொலைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்மொழிவு முதல்வாரால் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அது ஏகமனதாக சபையினாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன்படி கல்லடிப் பாலத்தில் உல்லாசப் பயணத்துறை சார்ந்த கடைகளை அமைத்து கொடுப்பதன் ஊடாக அவ்விடத்தை தொடர்ச்சியான பாதுகாப்பிற்கும் பயன்பாட்டிற்குமான இடமாக மாற்றுவதென்றும், இவ்வாறான தற்கொலைக்கான மனநிலைக்குள் செல்கின்றவர்களை உள ஆற்றுப்படுத்துகைகளின் ஊடாக அவர்களது மனநிலையை மாற்றம் செய்து கொள்வதற்கான வலையமைப்பின் (website) ஊடாக “கோவை” எனப்படும் மென்பொருள் உருவாக்கப்பட்டு அதனை கையடக்க தொலைபேசியினூடாக பயன்படுத்துவதற்கான நடைமுறை ஒன்றும் உருவாக்கப்பட்டு அதனை பாவனைக்கு விடுதல் தொடர்பாகவும் ஆரயப்பட்டது. அத்துடன் உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களை உடன் காப்பாற்றுவதற்கு வசதியாக 24 மணி நேர படகு ரோந்து சேவையை அப்பகுதியில் ஆரம்பிப்பதற்கும் சபையினால் அனுமதியளிக்கப்படடுள்ளது. மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் வதிகின்ற தகவல் தொழில்நுட்ப தகமை கொண்டவர்களின் தொழில்நுட்பம் சார்ந்த வினைத் திறனையும் அடைவு மட்டத்தை அதிகரிக்கச் செய்வதற்கான ஓர் களமாக ஐ.ரி.பார்க் ஒன்றினை ஏற்படுத்துவதற்கும், அவர்களுக்கான வேலை வாய்ப்புக்களையும் உருவாக்கிக் கொடுப்பதற்குமான முதல்வரின் முன்மொழிவும் ஏகமனதாக சபையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வெபர் மைதானத்தில் வணபிதா வெபர் அடிகளாரின உருவச் சிலை ஒன்றினை நிறுவுவதற்கும், வெபர் மைதான பிரதான வாயிலில் முகப்பு வளைவு ஒன்றினை அமைப்பதற்கும் முடிவானது. பொதுமக்களின் அன்றாட போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்கில் புகையிரத வீதியையும் – எல்லை வீதியையும் இணைக்கின்ற புகையிரத ஒழுங்கையின் போக்குவரத்துப் பிரச்சனைகள் தொடர்பாக அவ்வீதியை அகலமாக்கி புனரமைப்பு செய்வதற்கான தீர்மானமொன்றும் சபையில் நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.