யாழில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கண்டன போராட்டம்

breaking
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும், இந்த விடயத்தில் அரசு பொறுப்பு கூற வேண்டும் என வலியுறுத்தியும் கண்டன போராட்டம் வடதமிழீழ யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை 10.30 மணிக்கு இப் போராட்டம் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. முகநூல் ஊடாக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய ஒன்றுகூடியவர்கள் இப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தமது வாய்களை கறுப்பு துணிகளால் கட்டி, கைகளில் எதிர்ப்பு பதாதைகளை தாங்கியவாறும், தீபங்களை கொழுத்தியும் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். “இலங்கையின் இறையான்மையும் எனது மகனும் ஒன்றா, மக்களின் பிரதிநிகளே எமது மக்களின் கண்ணீர் உங்களுக்கு வெறும் தண்ணீரா, ஜயா ஜனாதிபதியே, சந்தேகப்படும் இடங்களை பார்க்க அனுமதிப்பேன் என கூறியது வெறும் நாடகமா?, ஏமாற்றாதே எமாற்றாதே காணாமல் போனவர்களின் உறவுகளை ஏமாற்றாதே, ஆள் விழுங்கி அரசே காணாமல் ஆக்கப்பட்டவருக்கு நீதி சொல், இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்த்து? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் போராட்டகாரர்கள் தாங்கியிருந்தனர். இதேவேளை, வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்களிற்கு நீதி கோரி பல்வேறு அமைப்புக்கள் தனித்தனியாக சிறுசிறு ஆர்ப்பாட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள் என்பதும், ஒருங்கிணைந்த தன்மையாக அல்லாமல் அனைத்தும் சிறுசிறு குழு போராட்டமாக அமைவதால், அவற்றின் தாக்கம் மிக குறைவாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.