வடதமிழீழம், யாழ்ப்பாணம் வரணியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவருக்கு உடந்தையாக இருந்தவர் என்று பொதுமக்களால் குற்றம் சுமத்தப்பட்ட இளைஞர் ஒருவர், கடுமையாகத் தாக்கப்பட்டு மீசாலையிலிருந்து வரணி இயற்றாலை வரையில் நேற்றுமுன்தினம் இழுத்துச் செல்லப்பட்டிருந்தார்.
தாக்குதலுக்குள்ளான நபர் வழங்கிய வாக்குமூலத்துக்கு அமைவாக அவரது வீட்டுக்கு முன்னால் வசிக்கும் நபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வரணி இயற்றாலையில் கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகத்தில் இரண்டு இளைஞர்கள் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பொதுமக்களிடம் பிடிபட்ட இரண்டு இளைஞர்களும், கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்கு அருகில் இருந்த ஒருவரே தமக்கு ‘வேவு’ பார்த்து தகவல் வழங்கியதாகத் தெரிவித்துள்ளனர்.
‘வேவு’த் தகவல் வழங்கியதாகக் கூறப்பட்ட இளைஞன் தலைமறைவாகியுள்ளார். அவர் மீசாலையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததும், அங்கு சென்ற பொதுமக்கள் அவர் மீது தாக்குதல் நடத்தி வரணிக்கு அழைத்து வந்தனர். இதன் பின்னர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கடும் காயங்களுடன் இளைஞனைப் பொறுப்பேற்ற பொலிஸார் சாவகச்சேரி மருத்துவமனையில் அவரைச் சேர்ப்பித்தனர். மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது, தனது வீட்டின் முன்பாகவுள்ள ஒருவரே தன்னைத் தாக்கியதாகக் கூறியுள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் அவரைக் கைது செய்தனர். அவர் நீதிவானின் இல்லத்தில் முற்படுத்தப்பட்டார். அவரை ஒரு லட்சம் ரூபா ஆள்பிணையில் விடுவித்து வழக்கை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்.