வடதமிழீழம்: யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மருந்தடித்த பழங்களைப் பிடிக்க சிறப்புச் செயலணியொன்று உருவாக்குவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபை மண்டபத்தில் த.தியாகமூர்த்தி தலைமையில் நேற்று இடம்பெற்றது. இந்த அமர்விலே சபை உறுப்பினர் கௌசல்யா குறித்த தீர்மான வரைவை முன்மொழிந்தார்.
அவர் தனது தீர்மான வரைவில், பொதுமக்களுக்கு பெரும் நோய்களை ஏற்படுத்தி உயிர் ஆபத்தைக் கொண்டுவரும் மருந்து விசிறிய பழங்களை முற்றாகத் தடை செய்ய வேண்டும் – என்று குறிப்பிட்டார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சபை உறுப்பினர் இராசலிங்கம், சந்தைகளிலும் பழக் கடைகளிலும் ஏராளமான மருந்து விசிறிய பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனை வாங்கி உட்கொள்பவர்கள் பல பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றனர். எனவே இதற்கென நாம் சிறப்புச் செயலணி ஒன்றை பொதுசுகாதார பரிசோதகர் தலைமையில் உருவாக்கி விரைவான செயற்பாட்டில் இறங்க வேண்டும் – என்றார்.
இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த சபை உறுப்பினர் சிவலோசன்,
இந்தப் பிரச்சனை தொடர்பாக ஏற்கனவே பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும் அவர்கள் தங்களின் சட்ட நடவடிக்கையை விரிவு படுத்த வேண்டும். இதற்கு நாம் பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு அழுத்தங்களை வழங்கி மருந்து அடித்த பழங்கள் விற்பனை செய்யும் அனைவரையும் பிடிக்க வேண்டும். இது தொடர்பில் பத்திரிகைகள் ஊடாக விளம்பரப்படுத்தி வியாபாரிகளுக்கு அறிவுறுத்தலும் கொடுக்க வேண்டும் – -என்றார்.
இறுதியாக நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் மருந்து விசிறிய பழங்களை விற்பனை செய்வோர்மீது நடவடிக்கை எடுக்க பொதுச்சுகாதார பரிசோதகர் தலைமையில் சிறப்புச் செயலணியொன்றை உருவாக்குவது என தீர்மானிக்கப்பட்டது.