கூட்டமைப்பின் ஆசைக்கு நூல் விட்டு பார்க்கும் சம்பிக்க

breaking
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு, வடக்கில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என ஶ்ரீலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க அழைப்பு விடுத்துள்ளார். பல்வேறு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காக, அமைச்சர் சம்பிக்க ரணவக்க இன்று(வியாழக்கிழமை) யாழிற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “யாழ்ப்பாணமும் கிளிநொச்சியும் நவீன நகரங்களாக மாற்றமடையும் என்று நாம் பெரிதும் நம்புகிறோம். இதற்காக அபிவிருத்திகளை மேற்கொள்ள நாம் பல்வேறு திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். மேலும், தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தும் நகரமாக யாழ்ப்பாணத்தை மாற்றவும் நான் எனது அமைச்சு ரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளேன். மார்ச் மாதம் வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்போது நாம் பல திட்டங்களை கொண்டுவரவுள்ளோம். எமது காலத்தில் நாம் வடக்கில் மின்சாரம் மற்றும் தண்ணீர் பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்கியுள்ளோம். மேலும், தீர்க்கப்படாமல் இருக்கும் இன்னும் சில செயற்பாடுகளையும் வெகுவிரைவில் அரசாங்கத்தின் ஊடாக நாம் மேற்கொள்வோம். வடக்கில், திருச்செல்வம்தான் இறுதி அமைச்சராக இதுவரை இருக்கிறார். இவருக்கு அடுத்து ஏனையோர் அமைச்சுப்பதவிகளை பெறாத காரணத்தினால் பல்வேறு செயற்பாடுகள் வடக்கிற்கு கொண்டுவரப்படாமலேயே இருக்கின்றன. கடந்த 50 வருடகாலமாக இதுதான் நிலைமையாக இருக்கிறது. இதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் உள்ளிட்டவர்கள் அமைச்சுப்பதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம். ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்தியதுபோல, அபிவிருத்தியிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இவர்கள் முன்வரவேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம். இதற்காக எமது ஒத்துழைப்புக்களை முழுமையாக வழங்கத் தயாராகவே இருக்கிறோம்“ என தெரிவித்துள்ளார்.