''நேராக முதல்வர் நாற்காலிதானா?''- ரஜினியை கடுமையாக விமர்சித்த சீமான்.!

breaking
மக்கள் பிரச்சினைகளை கவனிக்காமல் ரஜினிகாந்த் முதல்வர் பதவிக்கு மட்டும் ஆசைப்படுவது ஏன் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சீமான், ஆர்.கே.சுரேஷ் இருவரும் இணைந்து அமீரா என்ற படத்தில் நடிக்கிறார்கள். மலையாள நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் பூஜை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குநரும் நடிகருமான சீமான், ஆர்.கே.சுரேஷ், அனு சித்தாரா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் சீமான் பேசியதாவது:- “இது தமிழ் தலைப்பு அல்ல தான். ஆனால் இஸ்லாமிய பெண் ஒருவரைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளைப் பற்றிய கதை. அதனால் அமீரா என பெயர் வைத்துள்ளோம். படங்கள் இயக்கினாலும் அரசியல்வாதியாக இருந்தாலும் ஒரு நடிகனாகத் தான் நம்மை சட்டென அடையாளம் கண்டு கொள்கிறார்கள். திரையுலகத்தை நாங்கள் ஒரு வலிமைமிக்க கருவியாக பார்க்கிறோம். அது வெறும் பொழுதுபோக்கு சாதனம் அல்ல. நடிகர்கள் நாடாளக்கூடாது என்று சொல்லும் சீமான் திரைத் துறையில் இருந்துதானே வந்திருக்கிறார் என பலரும் கேட்கிறார்கள். நான் எனது ரசிகர்களை சந்தித்து அவர்களை தொண்டர்களாக மாற்றி கட்சியைத் துவங்கவில்லை. என்னுடைய பிறப்பு, வளர்ப்பு, பாதை, பயணம் எல்லாமே வேறு. கமல் ரஜினி இவர்களெல்லாம் திரைப்படத்துறையில் இருந்து வருகிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க. ஊழல் கட்சி என்பது இப்போதுதான் இவர்களுக்கு தெரிந்ததா? இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ரஜினிகாந்திடம் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களை ஏன் சென்று சந்திக்கவில்லை எனக் கேட்டால் நான் இன்னும் முழு நேர அரசியலுக்கு வரவில்லை என்கிறார். அப்படியானால் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை பார்ப்பதற்கு எதற்காக சென்றார்? எந்த நிகழ்வுகளிலும் பங்கெடுத்துக் கொள்ளமாட்டேன் ஆனால் சட்டமன்ற தேர்தலில் நின்று நேராக முதல்-அமைச்சர் நாற்காலியில் தான் போய் உட்காருவேன் என்று சொன்னால் அதை எப்படி ஏற்றுக்கொள்வது? தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஓட்டு போடுங்கள் என்றுசொல்லும் ரஜினிகாந்த் அதை யார் தீர்ப்பார் என தன் பின்னால் இருப்பவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும் அல்லவா? அப்படி செய்தால் தான் அவருக்கு பெயர் வழிகாட்டி. அவருக்கு பெயர்தான் தலைவன். உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய்துவிட்டுப் போங்கள் என்று சொல்வதற்கு ஒரு தலைவன் தேவை இல்லை. நடுநிலை வகிக்கிறேன் என இப்படிக் கூறுவது ஒரு மேம்போக்கான அறிவிப்பு. அதைத்தான் நாம் விமர்சிக்கிறோம். அடுத்ததாக நான் சிலம்பரசனை வைத்து எடுக்கப்போகிற படம் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதையும் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். அதனால்தான் நான் சினிமாவை ஒரு துப்பாக்கி போல, ஒரு கோடாரி போல, ஒரு அரிவாள் போல பயன் படுத்துகிறேன். நாங்களும் பேசாமல் இருந்து விடுகிறோம். தேர்தலில் தனியாக நிற்கிறீர்களே என்கிறார்கள். நான் தனியாக நிற்பதால் யாருக்கு நட்டம்? மற்ற கூட்டணிகளுக்கு நட்டம் என்றால் அதை பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? இப்போது அவர்கள் அமைப்பது கூட்டணியா? இல்லை. வெறும் நோட்டணி.. சீட்டணி.. என்னையாவது விடுங்கள்.. அப்படி என்றால் மக்களுக்கு நம்பிக்கையானவர்கள் யார் தான் என சொல்லுங்கள். தனியாக நின்று விட்டுப் போகிறேன்’. இவ்வாறு அவர் பேசினார்